‘எட்டப்பன்’ பொதுக்குழுவில் பொங்கிய ஆர்.பி.உதயகுமார்! ஓபிஎஸ்-ன் தளபதியை களமிறக்கிய இபிஎஸ்!
சென்னை : சென்னையில் வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்ஸின் தீவிர முன்னாள் ஆதரவாளரும், தற்போது எடப்பாடி முகாமில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஓபிஎஸ்ஸை முதலில் லட்சுமணன் எனக் குறிப்பிட்டு அடுத்த நொடியே எட்டப்பன் என மறைமுகமாக சீண்டியுள்ளார்.
Recommended Video
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வானகரத்தில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்களுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார் பேச்சு
இந்த முக்கிய தீர்மானங்களை ஓபிஎஸ்ஸின் தீவிர முன்னாள் ஆதரவாளரும், தற்போது எடப்பாடி முகாமில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். தீர்மானத்தை வாசிப்பதற்கு முன்னதாக பேசிய ஆர்.பி.உதயகுமார்," அண்டை நாட்டிலே ஒரு மக்கள் புரட்சி. தமிழகத்திலே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராய் வரவேண்டுமென புரட்சி ஏற்பட்டுள்ளது. தத்துவ தெளிவு கொண்டவர் யார், தடுமாற்றமில்ல தலைமை கொண்டவர் யார் யார் என்றால் அது எடப்பாடியார். எம்ஜிஆர் விட அதிக தொண்டர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைய செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ராமாயணத்தில் ராமர் பதவியேற்க லட்சுமணன் துணையாக நின்றார். இங்கு லட்சுமணன் காணவில்லை. ஆனால் ஒன்ரறை லட்சம் தொண்டர்கள் லட்சுமணர்களாக உள்ளனர்.

எட்டப்பன் என பேச்சு
கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தார். என்ன செய்வது? எனப் பேசினார். எட்டப்பன் என்ற வார்த்தையின் மூலம் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை தான் குறிப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அதே நேரத்தில் முன்னதாக லட்சுமணன் என குறிப்பிட்டு விட்டு பின்னர் அடுத்த நொடியே எட்டப்பன் என ஓபிஎஸ்ஸை மறைமுகமாக குறிப்பிட்டது ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி
காரணம் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு வட்டம் சற்றே அதிகமாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மிக முக்கிய மாவட்டமான மதுரையின் பலம் பொருந்திய அமைச்சராகவும் மாவட்ட செயலாளராக வலம் வந்தவருமான ஆர்.பி.உதயகுமார் ஓபிஎஸ்ன் மிக நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்டவர். எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் முதல்வர் வேட்பாளர் என பல்வேறு விவகாரங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகத் தீவிரமாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ் திட்டம்
மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனை மேற்கொள்ளும் போதெல்லாம் முக்கிய நிர்வாகிகளை ஓபிஎஸ்ஐ சந்திக்க வைக்க தூதாக பறந்து சென்றவரும் ஆர்.பி.உதயகுமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை பொய்யாக்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரையே பொதுக்குழு கூட்ட மேடையில் ஓபிஎஸ்ஐ ‘எட்டப்பன்' என பகிரங்கமாக விமர்சிக்க வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி எனவும் கூறி வருகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications