பகீர்.. வேளச்சேரியில் பைக்கில் கடத்திய விவிபேட் மிஷினில் 15 ஓட்டுகள்- திடுக் அறிவிப்பு! மறு தேர்தலா?
சென்னை: வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று உறுதி செய்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மாலை வேளையில், சென்னை வேளச்சேரியில் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அந்த ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.
விரட்டிய திமுகவினர்
அதில் வாக்கு பதிவாகவில்லை என்று முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார்.
வேளச்சேரியில் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றபோது திமுகவினர் அவர்களை விரட்டி பிடித்தனர்.
வேறு காரணம்
அது பழுதான இயந்திரம் என்றும் கள்ள ஓட்டு போடவில்லை என்றும் முதலில் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று கூறியுள்ளார்.
200 பேர் ஓட்டு போட்டனர்
அதேநேரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கள்ள வாக்குப்பதிவு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் சத்யபிரதா சாஹு. விவிபேட் இயந்திரம் என்பது யாருக்கு நாம் ஓட்டுப் போட்டோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் ஆகும். வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பள்ளி வாக்குச் சாவடியில் இருந்துதான் இது எடுத்துச் செல்லப்பட்டது. 200 பேர் வாக்கு அளித்து இருந்தனர்.
தலைமை தேர்தல் ஆணையம்
இந்த விவிபேட் இயந்திரம் வாக்கு பதிவு மையத்தில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது என்பது முற்றிலுமாக தேர்தல் விதிமீறல் என்ற விஷயத்தை தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்துள்ளார். ஏனெனில் லாரிகள் மூலமாக தான் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் அளித்துள்ளதாம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
இரு சக்கர வாகனம்
இந்த முறைகேட்டை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைமை தேர்தல் ஆணையம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. கள்ள ஓட்டு முறைகேடு நடந்ததா, இல்லையா என்பதைவிட, இருசக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் விதிமீறல் என்பதால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தெரியாதது எத்தனை
இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக பிடிபட்டுள்ளது. இதேபோல கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தால் யாருக்குத் தெரிந்திருக்கும்.. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களில் அசாம் மாநிலத்தில் பாஜக முறைகேடு செய்ததாக செய்திகள் வந்துள்ளன. அதே போல, இன்னும் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல முறைகேடுகள் நடந்ததோ தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.