3 நாட்களில் நடந்த 3 விஷயம்.. புது வருடத்தில் புது பிளான் போடும் பாமக.. அதிர்ச்சியில் அதிமுக கூட்டணி!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், எம்பி அன்புமணியும் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் அளிக்கும் பேட்டியும் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், எம்பி அன்புமணியும் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் அளிக்கும் பேட்டியும் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இவர்கள் வெளியேறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.
லோக்சபா தேர்தலையும், தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து பாமக சந்தித்தது. லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது.
ஆனால் இன்னொரு பக்கம் சட்டசபை இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதியிலும் அதிமுக கூட்டணி வென்றது. அதிமுகவின் இந்த வெற்றிக்கு பாமகவும் அதன் வன்னியர் வாக்கு வங்கியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
பா.ம.க.இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் தந்த அன்புமணி
ஆனால் என்ன
ஆனால் தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், எம்பி அன்புமணியும் பாஜக மற்றும் அதிமுக இரண்டிற்கும் எதிராக பேசி வருகிறார்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டு கட்சியையும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். பாஜக, அதிமுக இரண்டு தரப்பையும் இவர்களின் பேச்சு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன தொடக்கம்
பாமக - பாஜக கூட்டணி இடையே பிரச்சனை தொடங்கியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் என்ஆர்சி யில் இருந்துதான். பாமக நடத்திய புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கூடாது என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாஜகவை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
சிஏஏ எப்படி
ராஜ்யசபாவில் சிஏஏவிற்கு பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக, ஆதரவாக வாக்களித்தது. இதனால் பாமக பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் தற்போது என்ஆர்சிக்கு எதிராக பாமக குரல் கொடுக்க தொடங்கியுள்ளது. இதுதான் பாஜக மற்றும் பாமக இடையே பிரச்சனை முதலில் உருவாக்கியது.
பேசினார்
மேலும் நேற்று திண்டிவனத்தில் நடந்த பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு போதிய ஒதுக்கீடு தரவில்லை. இது வருத்தமளிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும். பாமக இல்லையென்றால் இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியாது.
ஆட்சி காரணம்
அதிமுக ஆட்சியில் இருக்கவே பாமகதான் காரணம். அதை அவர்கள் மறக்க கூடாது.ம் பாமகவுடன் கூட்டணி இல்லை என்றால் இன்று அதிமுக ஆட்சியில் இருக்க முடியாது. அது அவர்களுக்கும் கூட தெரியும் என்று அன்புமணி குறிப்பிட்டார்.
ரயில் கட்டணம்
அதேபோல், ரயில்வே கட்டண உயர்விற்கு பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை விமானக்கட்டணத்தை விட கூடுதலாக உயர்த்தும் முறை நியாயமற்றதாகும். இந்த முறையில், அண்மையில் அதிகமாக கண்டனம் வசூலிக்கப்பட்டது. இயல்பான கட்டணத்தை விட சுமார் 10 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது சுரண்டல். இம்முறையை முற்றிலுமாக கைவிட தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மூன்று
இப்படி தொடர்ச்சியாக மூன்று நாட்களில் பாஜக, அதிமுகவிற்கு எதிராக பாமக அணுகுண்டுகளை போட தொடங்கியுள்ளது. 3 முடிவுகளும் கூட்டணி கட்சிகளை நேரடியாக சீண்டியுள்ளது. இதனால் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.