வன்முறை கூடாரமான அதிமுக ஆபீஸ்! நிர்வாகிகள், நிருபர்கள் மீது தாக்குதல்! மொத்தமாய் களமிறக்கிய ‘வாரிசு’
சென்னை : அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இருபிரிவுகளாக கைகலப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பு பணியில் இருந்த கேமராமேனை தாக்கி சிலர் வெளியே தள்ளியதாகவும், அதிமுக அலுவலகத்திற்குள் தொண்டர்கள் மட்டுமின்றி கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் ஏராளமானோர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், தற்போது கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போதே ஒற்றைத் தலைமை தேவை என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி போட்டு முழக்கமிட்டனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்குமாறு ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அண்மையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவு நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில் நாளுக்கு நாள் விவகாரம் தீவிரமாகி வரும் நிலையில், 5வது நாளாக தங்களது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ் வீட்டில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை நடத்திய நிலையில், இருவரும் கட்சி அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.

சுமூகமான முடிவு
இதையடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பிரச்சினைகள் குறித்து விவாதித்த பின் ஒரு சுமுகமான முடிவு ஏற்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. தொடர்ந்து சிறிது நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து ஜெயக்குமார் செல்லூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த நிலையில், இரு தரப்பினரும் பிரிந்து தங்கள் தலைவர்களை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் திடீரென அங்கு தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு பிரிவுகளாகப் பிரிந்து தொண்டர்கள் தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியானது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான மூத்த நிர்வாகி ஒருவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பலர் ரத்த காயத்துடன் அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.

திடீர் தாக்குதல்
இதனால் கட்சி அலுவலகம் வன்முறைக் காடாக காட்சி அளித்த நிலையில் பெரும்பாலான செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பிரச்சினையை படம் பிடித்ததாக தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருப்பதாகவும் 'முக்கிய நிர்வாகி' ஒருவரின் 'வாரிசு' தங்கள் ஊரைச் சேர்ந்த பலரை பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தலைமை அலுவலகத்தில் குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications