யாருக்கும் கிடையாது.. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆதரவாளர்கள் மோதல்
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

144 தடை உத்தரவு
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் வாகனத்தில் பண்டல் பண்டலாக ஏற்றப்பட்டது.

வருவாய்த்துறை ஆலோசனை
இதனைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில், அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து தாசில்தார்களுடன் ஆலோசனை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, காவல் துறையினருடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

ஓபிஎஸ் போராட்டம்
பின்னர் தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ்-யிடம் சீல் வைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி விளக்கமளித்தார். அதிமுகவினரிடயே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்கவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்கவும் சீல் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் விரைந்து வெளியேற வேண்டும் என்றும் காவல் துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் திடீரென தரையில் அமர்ந்து சில நிமிடங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்
தொடர்ந்து அதிமுக அலுவலகத்தின் பொதுச்செயலாளர் அறைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பின், அங்கிருந்து ஓபிஎஸ் வெளியேறினார். இதன்பின், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளிக் கதவிற்கும் சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications