ஜனவரி 19, மார்ச் 21 திருப்புதல் தேர்வுகள்: 10,12 தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி மூன்றாவது வாரத்திலும் இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் இறுதியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 21ஆம் தேதி இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு கல்வியாண்டிலும் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு எந்த தேர்வும் எழுதாமல் தேர்ச்சி பெற்றனர்.
நடப்பாண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. செப்டம்பர் முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்களின் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். ஏப்ரல் இறுதியிலோ, மே மாதம் முதல் வாரத்திலோ பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வௌயிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு;
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அடைவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் முதல் மற்றும் 2ஆம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்
பள்ளிப் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்... தயாராகுங்கள் மாணவர்களே - அன்பில் மகேஷ் உறுதி
பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 19ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி ஜனவரி 27ஆம் தேதி வியாழக்கிழமை வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். விரிவான தேர்வுக் கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதையடுத்து தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும், திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முதல் முறையாக அரசு தேர்வுகள் துறை அட்டவணை வெளியிட்டு திருப்புதல் தேர்வை நடத்துகிறது. கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.