ரீவைண்ட் 2020: ஜல்லிக்கட்டு முதல் ஆண்டாள் யானையின் அசத்தல் பேச்சு வரை திருச்சியில் டாப் 10
சென்னை: சில நினைவுகள் மறக்க முடியாதவை, அவற்றை மனதில் மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கும் போது அவை மகிழ்ச்சியை அதிகரிக்கும். செய்திகளும், சம்பவங்களும் அப்படித்தான் அவற்றை மறுபடியும் திரும்பி நினைத்து பார்க்கும் போது சில நினைவுகள் சந்தோஷத்தையும்,சில நினைவுகள் சோகத்தையும் ஏற்படும். 2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் திருச்சியில் நிகழ்ந்த சில முக்கியமான டாப் 10 நிகழ்வுகளை சற்றே திரும்பி பார்க்கலாம்.
Recommended Video
திமுக வசமான திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவினரே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். கே.என். நேரு திருச்சி திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தார். இந்த வெற்றி திமுகவினரிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
மணப்பாறை ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. நான்கு கிராம மக்களால் நடத்தப்பட்ட இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 400க்கும் மேற்பட்ட காளையர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர். களத்தில் நின்று விளையாடிய காளைகளை வீரத்தோடு அடக்கி பரிசுகளை தட்டிச்சென்றனர் மாடுபிடி வீரர்கள். வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி என்ஐடி மாணவரின் ரேடார் தொழில் நுட்பம்
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த ராணுவ தளவாட கண்காட்சியில் திருச்சி என்ஐடி மாணவரின் கண்டுபிடிப்பான ரேடார் தொழில் நுட்பம் இடம் பிடித்து பாராட்டுக்களை பெற்றது. உலகத்தை முடக்கிய கொரோனா திருச்சியை விட்டு வைக்கவில்லை. பிரபல கோவில்களான சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பல மாதங்களாக மூடப்பட்டன.
எளிமையாக நடந்த கல்யாணம்
கொரோனா காலத்தில் அனைத்து விஷேசங்களுமே எளிமையாக நடந்து முடிந்தது. அமைச்சர் வளர்மதி வீட்டு கல்யாணம் குணசீலம் பெருமாள் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.
மனிதநேய மருத்துவர்
வாய் பேச முடியாதவர்களுக்கு பிரத்யேக முக கவசம் அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த மருத்துவர் ஹக்கீம். மனித நேய மருத்துவர் ஹக்கீம் இந்த முக கவசத்தை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
மீன் வாங்க சிறைச்சாலை
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள குளத்தில் வெகு ஜோராக மீன் வளர்ப்பு நடைபெற்றது. இந்த மீன்கள் குறைந்த விலைக்கு சிறைக்காவலர்களால் விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்க மக்கள் ஆர்வத்துடன் சிறைக்கு சென்றனர்.
சைக்கிளில் வலம் வந்த அமைச்சர்
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் திருச்சி மாநகரத்தில் சைக்கிளில் வலம் வந்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். சைக்கிள் பயன்படுத்தினால் காற்று மாசு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதை உணர்த்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சைக்கிள் ஓட்டினார் அமைச்சர்.
ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆண்டாள் யானை கோவிலின் செல்லப்பிள்ளை மட்டுமல்ல பாகனுடன் கட்டளைக்கு ஏற்ப கிளிப்பிள்ளையாக மாறி பதில் சொல்லும். பாகன் பேச பேச பதில் சொல்லும். இரவு நேரத்தில் சாலைகளில் நடந்து கொண்டே பாகன் கேட்டும் கேள்விக்கு பதவிசாக ஆண்டாள் யானை பதில் சொன்ன வீடியோ செம வைரல் ஆனது.
லாரி கடத்தலை மடக்கிய போலீஸ்
இதே போல மணப்பாறை ரைஸ்மில்லில் புது லாரியை கடத்திய கடத்தல்காரர்களை காவல்துறையினர் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங் சம்பவம் திருச்சி மாநகரத்தில் இந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
காந்தி மார்க்கெட் திறப்பு
எத்தனையோ சம்பவங்கள் திருச்சியில் நடந்திருந்தாலும் கொரோனா காலத்தில் மூடப்பட்டிருந்த காந்தி மார்கெட் நவம்பர் இறுதியில் திறக்கப்பட்டதை திருவிழா போல கொண்டாடினார்கள் திருச்சி மக்கள். பட்டாசுகள் வெடித்து மேள தாளம் முழங்க காய்கறி சந்தையை திறந்து விற்பனை செய்தனர்.