புதுவையில் இன்றுமுதல் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000.. தமிழ்நாட்டில் கொடுக்கிறார்களா? தமிழிசை கேள்வி
சென்னை: புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 இன்று முதல் கொடுப்பதாகவும், தமிழ்நாட்டில் கொடுக்கிறார்களா, இல்லையா என்றும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பொங்கல் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் அனைவரும் இணைந்து கொண்டாடும் முதல் பொங்கல் இதுவாகும். இதற்கு இறைவனின் ஆசியும், தடுப்பூசியும் தான் காரணம். இந்த இரண்டும் மக்களுக்கு உதவி செய்திருக்கிறது.
சீனா போன்ற நாடுகள் இன்னும் முழுமையாக கொரோனா பரவலில் இருந்து வெளிவராத சூழலில், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. இதற்காக விஞ்ஞானிகள், முன்கள பணியாளர்கள், பிரதமர், முதலமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும்.
"மார்ச் 8" மகளிர் தினத்தன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அறிவிப்பு? தமிழக அரசின் பலே திட்டம்
விமர்சனங்கள்
மிகவும் அபாயமான சூழலில் இருந்து வெளிவந்திருக்கும் சூழலில், நாம் அரசியலில், சமூகமும், வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சின்ன கருத்து வேறுபாடோ, விமர்சனமோ வந்தால், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதை கைவிட வேண்டும். தமிழர்களுக்கு என்று ஒரு நாகரீகம் இருக்கிறது. அந்த நாகரீகத்தோடு, மரபு மீறாமல் விமர்சிக்க வேண்டும்.
எது சரி, எது தவறு?
தமிழ்நாட்டில் நிலவி வரும் பிரச்சினை அனைவருக்கும் தெரியும். சில நிகழ்வுகள் சரித்திரத்தில் நடைபெறும். எந்தவொரு நிகழ்வு நடந்தாலும், மற்றவர்களை புண்படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவகாரத்தில் எது சரி, எது தவறு என்ற விவாதத்திற்குள் செல்வது சிரமம். ஆனால் சில விமர்சனங்களில் கடுமையாக ஆளுநரை விமர்சித்து வருகிறார்கள். அது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
தமிழ்நாடு பெயர்
காமராஜர் காலத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு, அண்ணா காலத்தில் சட்டமாக்கப்பட்டது. இருவருமே மரியாதைக்குரிய தலைவர்கள். நாம் நமது பெருமையையும், உரிமையையும் எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே கைகளில் இருக்கிறது. அனைவருக்கும் கருத்துகள் இருக்கிறது. அது மோதலாக இல்லாமல், மோசமான விமர்சனங்களாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக தமிழ்நாடு பொங்கல்
தொடர்ந்து, தமிழிசை செளந்தரராஜனுக்கு தமிழக பொங்கலா, தமிழ்நாடு பொங்கலா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக தமிழ்நாடு பொங்கல். தமிழகம் என்ற பெயர் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு என்ற பெயர் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வார்த்தை விடுத்து இன்னொரு வார்த்தை பிரயோகிக்க முடியாது. என் தமிழ்நாடு, என் தமிழ் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000
தொடர்ந்து, இன்று முதல் புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுக்கிறோம். அவர்களுக்கு பொங்கல் பரிசாக கொடுக்கிறோம். முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து கொடுக்கிறார். அவர்கள் கொடுக்கிறார்களா, இல்லையா என்பதை கேள்விக்குறியோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.