கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளில் தொடக்கம் - இது கட்டாயம்
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
சென்னை: காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்போது முதல் அமல்
இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

யார் யாருக்கு நிதி உதவி
அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

காமராஜர் பிறந்தநாளில் தொடக்கம்
இதனிடைய காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் எனவும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications