அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் அபேஸ்.. பரபரத்த ராயப்பேட்டை.. போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக நிர்வாகி உச்சிமாகாளி என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உச்சிமாகாளி புகார் அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அதிமுகவிற்கு உரிமை கோரி வரும் நிலையில், இந்த ரேசில் தற்போது எடப்பாடி கையே ஓங்கியுள்ளது.

இபிஎஸ் - ஓபிஎஸ்
அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமும் எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தங்களுக்கே இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது. இதற்கு பதிலடியாக தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன என்பதை இரு அணிகளும் உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்மகன் உசேன் உள்பட
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, டி.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏராளமானோர் வருகை
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி தொண்டர்கள் பெரும் அளவில் கூடியிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துணை நிர்வாகிகளும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சிசிடிவி கேமரா பதிவுகளை.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளியும் வருகை தந்திருந்தார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடிவிட்டார். இது குறித்து உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக அலுவலகத்தில் வைத்து கட்சி நிர்வாகியின் பணம் திருடு போனது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications