பஞ்சமி நிலத்தை வாங்க போறீங்களா.. விற்க போறீங்களா.. சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உடனே பாருங்க
சென்னை: பஞ்சமி நிலத்தை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்தது செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நிலத்தை மீட்டு தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் தாலுகா பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது தாத்தாவுக்கு இதே கிராமத்தில் 1.12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை அரசு வழங்கியது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்ற பட்டியலின மக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த பஞ்சமி நிலத்தை காமராஜின் தாத்தா கடந்த 1963ல் பட்டியலினத்தை சேராத பெருமாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரியும், பஞ்சமி நிலத்தை மீட்க கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி காமராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிற பிரிவினருக்கு விற்பது சட்டவிரோதமானது என்பதால், அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். பஞ்சமி நிலத்தை மீட்டு, தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீங்கள் வாங்க போகும் நிலாம் பஞ்சமி நிலம் என்பதை எப்படி அறியலாம்:நீங்கள் இடம் வாங்க போகிறீர்கள் என்றால், முதலில் போக வேண்டிய இடம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகம் ஆகும். அங்கு தான் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் பதிவேடுகளை புத்தகங்களில் பதிவேற்றி வைத்திருப்பார்கள். அங்கு போய் நீங்கள் வாங்க போகும் நிலத்தின் சர்வே நம்பரை சொல்ல வேண்டும்.
அப்போது விஏஓ அந்த நிலம் கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா, டி.சி நிலமா (பஞ்சமி), கள்ளர் நிலமா, ஆதிதிராவிடர் நிலமா அல்லது எந்த மாதிரியான நிலம் என்ற குறிப்புகளை உங்களுக்கு தருவார்கள். இப்படி குறிப்புகளை வாங்கி கொண்டால் நிலம் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்பட முடியும்.
நிலம் யாருக்கு சொந்தம், வில்லங்கம் உள்ளதாஎன்பதை பார்க்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு பார்க்க வேண்டியது நிலம் என்ன வகை என்பதை தான். அதேநேரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பதில் சம்பந்தப்பட்ட மனை உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்றும் கவனிக்க முடியும்.
அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக வாங்காமல் தப்பிக்க முடியும். ரீ-செட்டில்மெண்டு லேண்டு ரிக்கார்டு' (RSLR) என்றால், இப்போது பயன்பாட்டில் உள்ள அ-பதிவேடான யு.டி.ஆர்-க்கு (Updating Registry Scheme UDR) முந்தைய பழைய கிராம கணக்கு ஆகும். இதில் தான் டிசி நிலமா இல்லையா என்பதை நீங்கள் அறிய முடியும்
நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக பாருங்கள். அதே நேரம் பஞ்சமி நிலங்களை ஆதிதிராவிடர்கள் மட்டும் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது.












Click it and Unblock the Notifications