தேனி அன்புடன் தங்களை வரவேற்கிறது! மொத்தமாய் தாவும் ‘சேலம்’ ஆதரவாளர்கள்? என்ன நடக்கிறது அதிமுகவில்?
சென்னை : சேலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு வெற்றி கிடைத்திருக்கும் நிலையில், ஒன்றிய செயலாளர் அளவிலான நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விரைவில் ஓபிஎஸ் தரப்பில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் அடுத்து யார் என்ற கேள்வியே எழுந்து நிற்கிறது.
ஆட்சியில் இல்லாத நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் மீண்டும் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும்..
எடப்பாடி பழனிச்சாமிக்கு திருப்பம் தருமா திருச்சி.. பரபரக்கும் நகரம்.. குவியும் அதிமுகவினர்!
ஓபிஎஸ் தரப்பு
இதற்காக ஓபிஎஸ் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தங்கள் அணிக்கு வந்து விட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக முழுமையாக ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது நிச்சயம் அவர்களுக்கு உரிய மரியாதையும் பதவிகளும் அளிக்கப்படும் எனவும் மக்களவைத் தேர்தல் எம்பி சீட் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட் என அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.
தீவிரம் காட்டும் நிர்வாகிகள்
ஓபிஎஸ் தரப்புக்கு தற்போது முழு வெற்றி கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. காரணம் தற்போது திண்டுக்கல், தேனி, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒன்றிய அளவிலான நிர்வாகிகளே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் போதாது மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து எப்படியாவது பெரிய தலைகளை கொண்டு வர ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
சேலம் மாவட்டம்
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு செல்வாக்கு அதிகமுள்ள கொங்கு மண்டலம் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை இழுப்பதற்காக ஓபிஎஸ்ஸின் வலதுகரம் போல் செயல்பட்டு வந்த மூத்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவரும் களத்தில் இறங்கியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் அவர்கள் ஓபிஎஸ்ஸை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னேற்பாடுகள்
விரைவில் சென்னை அல்லது சேலத்தில் இந்த சந்திப்பு இருக்கும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிமுகவில் சொந்த மாவட்ட நிர்வாகிகளே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவருக்கு நெருக்கடி தர முடியும் என ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது. இதற்காக சேலம் நிர்வாகிகளை வளைக்க வேண்டுமென முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது என்கின்றனர் தேனி நிர்வாகிகள்.