'அரசு இயந்திரம் தூங்குகிறது.. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை'.. கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை!
சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக எண்ண எண்ண பெருகும் வருத்தம் என்ற தலைப்பில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை பத்திரிக்கை அம்பலப்படுத்தி வருகின்றன.

ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில். நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.
மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு. இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள்.
அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.
அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா?
அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் பாசனத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் பிரதானமாக விளங்கும் காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளிலும், ஏரி, குளங்களிலும் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மணல் திருட்டு தொடர்பாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் புகார் கொடுத்தால் போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மணலை திருடும் கும்பலுக்கு போலீசாரே துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆறு, ஏரி மற்றும் குளங்களில் மணல் திருட்டு நடப்பதை தடுக்க செல்லும் ஆர்.டி.ஓ, வி.ஏ.ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் மணல் கடத்தும் கும்பல் வாகனங்களை மோதச் செய்து கொலை செய்து விடும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது. மணல் திருட்டு என்பது நம்மை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆற்றுபடுகையில் மணல் ஒரு ஸ்பான்ஞை போல பணி செய்கிறது. மழை காலங்களில் தண்ணீரை உறிஞ்சி வைத்து மற்ற நாட்களில் நிலத்தடி நீரின் ஆழம் அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இதில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டினால் இந்த வாய்ப்பு நீக்கப்படுவதால் பெரும்பாலான நீர் ஓடி கடலில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கோடைகாலங்களில் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications