சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் 7 பேர் பலி - பட்டாசு கடை உரிமையாளர் மீது வழக்குபதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுக்கடை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுக்கடை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்திருந்தது, விபத்திற்கு காரணமானவர், மரணம் ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் செவ்வாய்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடைக்கு அருகே இருந்தவர்கள் தீயில் சிக்கினார். மேலும் இந்த தீ விபத்தின் போது பட்டாசுக் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, டீக்கடை, செல்போன் கடைகளில் கடைகளில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
பேக்கரியில் இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் செம்பியன்,காலித்,ஷாஆலம்,ஷேக்பஷீர் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர்,தீயணைப்புத்துறையினர் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.15 வயது சிறுவனை தேடி வந்த நிலையில் இடிபாடுகளிடையே படுகாயங்களுடன்
சடலமாக சிறுவன் மீட்கப்பட்டான். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தாக சம்பவ இடத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அளவிற்கு அதிகமாக பட்டாசுகளை இருப்பு வைத்ததும் தீ விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்திருந்தது, விபத்திற்கு காரணமானவர், மரணம் ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக செயலாளராக இருக்கும் செல்வகணபதியும் இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.