பள்ளிக்கரணை டூ சோழிங்கநல்லூர்.. 5 கிமீக்கு 1 மணி நேரம்.. CM சார், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு நன்றி
சென்னை: பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழி என்பது இரு வழியிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் மிகமிக அதிகமாக இருக்கிறது. குறுகிய சாலை, அதிகமான ஆக்கிரமிப்பு, மிக அதிகமான வாகன நெருக்கம் போன்ற காரணங்களால் நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் சாலையின் நிலையும் சில பகுதிகளில் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இந்த விவகாரத்தில் ஐடி பணியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் மிகவும் பணக்கார தொகுதி என்றால் அது சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி தான்.. ஏனெனில் இந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் பெரிய ஐடி நிறுவனங்கள் நிறைந்தவை ஆகும். மிகவும் அதிகப்படியான வளர்ச்சி அடைந்த இந்த பகுதிக்கு செல்ல இரு வழிகளில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஓஎம்ஆர் சாலை, பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக செல்லும் சாலை என இரு வழிகள் உள்ளன. இதில் பலர் பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக செல்லும் சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை கடும் நெரிசல் உள்ள சாலையாக இருக்கிறது..

ஏனெனில் தாம்பரம், வழியாக வருபவர்களும், குரோம்பேட்டை வழியாக வருபவர்களும், கிண்டி வழியாக வருபவர்களும், வேளச்சேரி வழியாக வருபவர்களும் சோழிங்கநல்லூர் செல்ல பள்ளிக்கரணை வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் சோழிங்கநல்லூர் இருந்து பல்வேறு பகுதிக்கு செல்ல பள்ளிக்கரணை வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பள்ளிக்கரணையில் சாலைகள் மிகக் குறுகியதாக இருக்கிறது.
இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒரு பக்கம் சென்றாலும் நெரிசல் ஏற்படும் நிலையில் சாலை உள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குறுகியதாக இருக்கிறது. இதனால் பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியை பொறுத்தவரை எப்போதும் நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் எனறும், பள்ளம் மிகுந்த சாலையை மாற்றி தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த சூழலில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், அலுவலகத்தை சரியான நேரத்தில் அடைய உதவியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.. இன்று பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 5 கி.மீ தூரத்தை அடைய 1 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆனது.
உலகத்தரம் வாய்ந்த சாலையாகவும், பள்ளங்கள் இல்லாத அழகான சாலையாகவும் இருந்தது என்பது நல்ல விஷயம். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி. தென் சென்னை எம்.பி.க்கு (தமிழச்சி தங்கப்பாண்டியன்) சிறப்பு நன்றி" இவ்வாறு கிண்டலாக கூறியுள்ளார். அதாவது சாலை மிக மோசமாக உள்ளதாகவும், சாலையை சரியாக அமைக்காத காரணத்தால் நீண்ட நேரம் நெரிசலில் மாட்டியதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மேடவாக்கத்திலிருந்து பள்ளிக்கரணை வழியாக துரைப்பாக்கத்திற்கு செல்லும் பாதை மோசமாக இருக்கிறது. குண்டு குழிகள் நிறைந்தவை. கடந்த ஆண்டு மழை காலத்திற்குப் பிறகு சாலைகள் அமைக்கப்படவில்லை. பருவமழை இப்போதுதான் தொடங்கியிருப்பதால் கடினமான காலங்கள் வர இருக்கிறது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் பல நெட்டிசன்கள் பள்ளிக்கரணையில் சாலை வசதி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தயவு தாட்சணை இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications