சசிகலாவின் ஒரே நம்பிக்கை.. 'இது நடந்தால்' அதிமுகவில் திருப்பு முனை நிகழும்.. பரபரப்பு!
சென்னை : அதிமுகவை கைப்பற்ற விரும்பும் சசிகலாவிற்கு, அக்கட்சியின் ஒபிஎஸ் இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கை வெகுவாக நம்புகிறார்கள். அந்த வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சசிகலா .
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக வி.கே சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்
இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளர், துணைபொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டு,கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழு
இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை பெருநகர உரிமையியல் 4-வது நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

தினகரன் வாபஸ்
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, மதுசூதனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதால் அவரும் மனுவை வாபஸ் பெறுவார் என்று கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்படடது. ஆனால் சசிகலா வாபஸ் வாங்கவில்லை. வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது

திருப்பு முனை நிகழும்
இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த நீதிமன்றம், அதிமுக நிர்வாகிகளின் மனுவுக்கு சசிகலா தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 20-ம்தேதி நடக்க உள்ளது. இந்த வழக்கு குறித்து சசிகலா வழக்கறிஞர் என்.ராஜாசெந்தூர்பாண்டியன் கூறும் போது. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பலர் சசிகலா பக்கம் இருக்கிறார்கள் சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசி நலம் விசாரிப்பதால் தொண்டர்கள், கட்சி விசுவாசிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் அதிமுகவில் திருப்புமுனை நிகழும். இந்த வழக்கில் சட்ட ரீதியாக போராடி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

சசிகலா திட்டம்
இதன்படி வழக்கில் தனக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்று சசிகலா நம்பும் நிலையில், விரைவில் தொண்டர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார். முதலில் மெரினா கடற்கரைக்கு, ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். அப்போது தான் அதிமுகவின் எத்தனை நிர்வாகிகள் சசிகலா பக்கம் செல்வார்கள் என்பது தெரியும். இந்த நெருக்கடியை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications