சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸில் பொன்னியின் செல்வன்.. தமிழக ஆளுநரை வரவேற்ற விவேக்
சென்னை: சென்னை வேளச்சேரியில் ஜாஸ் சினிமாஸின் ஐமாக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் வரவேற்றார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. இந்த படம் அமரர் கல்கியின் காவியம் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஆர் பார்த்திபன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பச்சை துரோகம்.. குருமூர்த்தியை விடுங்க.. எடப்பாடி தோள்தொட்டு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசித்து பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சத்யம் சினிமாவில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வெறிநாய் ட்வீட் போட்டது நீங்களா இல்லை உங்கள் அட்மினா என கேட்ட போது கடுங்கோபமடைந்த ராஜா, என்னிடம் நக்கல் செய்ய வேண்டாம். சீரியஸான கேள்வி இருந்தால் கேளுங்கள் இல்லாவிட்டால் கெட் அவுட் என கோபமடைந்தார்.
தமிழக ஆளுநர்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் சென்னை வேளச்சேரியில் உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்திருந்தார். அவரை ஜாஸ் சினிமாஸ்,ஐமாக்ஸ் உரிமையாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் வரவேற்றார். இவர் இளவரசியின் மகன், கிருஷ்ணபிரியாவின் சகோதரர் ஆவார்.
ஜெயலலிதா ஆட்சி
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கோலோச்சிய சசிகலா குடும்பத்தினர் பல்வேறு சொத்துகளை மிரட்டி அபகரித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள சத்யம் சினிமாஸின் 11 திரையரங்குகளை சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு வாங்கியது. இந்த டீல் ரூ 1000 கோடிக்கு முடிந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய பணம் சசிகலாவுக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்பப்பட்டு அப்போது அரசியல் ரீதியில் சர்ச்சையை கிளப்பியது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி
சசிகலாவுடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதாவுக்கும் இது சங்கடத்தை தந்தது. இதுகுறித்து திமுக தலைவராக இருந்தவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் திரையரங்குகள் எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ரூ 1000 கோடி
இதையடுத்து பீனிக்ஸ் வணிக வளாகத்தின் நிர்வாகமோ, ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளை ரூ 1000 கோடிக்கு சசிகலா வாங்கியதாக கூறுவது உண்மையல்ல. சென்னையில் உள்ள எங்களது 11 திரையரங்குகளை யாருக்கும் விற்கவில்லை. ஜாஸ் சினிமாஸ் வாடகை அடிப்படையில் திரையரங்குகளை நடத்தி வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாஸ் சினிமாஸில் ரெய்டு
இந்த நிலையில்தான் கடந்த 2017ஆம் ஆண்டு ஜாஸ் சினிமாஸில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அந்த குழுமத்திற்கு சொந்தமான 187 இடங்களில் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற போது ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை தனது அண்ணன் மகன் விவேக்கிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. அப்போது டிடிவி தினகரனுக்கும் விவேக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அது போல் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ விவேக் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சர்ச்சை கிளம்பியிருந்தது.