ஏற்கனவே நான் பொதுச்செயலாளர்! ‘அவங்க’ சண்டை போட்டுக்குறாங்க! அதிமுக ஆபிசுக்கு வண்டியை விடும் சசிகலா!
சென்னை : அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் நீடிப்பதாகவும் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன் என கூறியுள்ள சசிகலா பொன்விழா ஆண்டில் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது வருத்தம் அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடினார். +2 தேர்வில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி உள்ளிட்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனது கால்களால் வரைந்த ஓவியத்தை சசிகலாவுக்கு பரிசாக வழங்கிய நிலையில், அந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த சசிகலா அந்த மாணவியை வெகுவாகப் பாராட்டினார்.

சசிகலா பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், "அதிமுக தலைமைக் கழகம் தற்போது சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு நீங்களும் உரிமை கோருவீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து உள்ளதாகவும், தான் ஏற்கனவே பொதுச் செயலாளர் ஆகிவிட்டதாக கூறினார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் சண்டை
தொடர்ந்து பேசிய அவர்," எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச் செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இது அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்றும் இதில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருவது வேதனையாக உள்ளது. பொன்விழா ஆண்டில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வருத்தமாக இருக்கிறது. தான் தலைமைக் கழகத்திற்கு கட்டாயம் செல்வேன்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை செய்து தரவில்லை என பல்வேறு பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதியோர் உதவித்தொகை மற்றும் மின்வெட்டு ஆகிய பிரதான பிரச்சனைகளை பொதுமக்கள் குற்றச்சாட்டாக தன்னிடம் முன்வைக்கின்றனர். தான் வெளியில் செல்வதால்தான் மக்கள் தன்னிடம் குறைகளை முன்வைக்கின்றனர். கட்சி என்று சொல்லக் கூடியவர்கள் உட்கட்சியிலேயே சண்டையிட்டு கொண்டால் பொதுமக்கள் நாளை எப்படி ஓட்டு போடுவார்கள்?

மக்கள் சொல்ல வேண்டும்
அதனை அவர்கள் நினைக்கவில்லை. தற்போது உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். தெருக்கடை வியாபாரிகளிடம் அவர்கள் அராஜகப் போக்கை கையாள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் . தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது . கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் அதனை சொல்ல வேண்டும்" எனவும் சசிகலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications