இப்படியே போனா கட்சியை எப்படி நடத்துவீங்க? சட்டென கேட்ட சுப்ரீம் கோர்ட்.. திகைத்த ஓபிஎஸ், ஈபிஎஸ்!
சென்னை : இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக, தொடர்ந்து உங்கள் கட்சி விவகாரம் நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்? என்றும், ஜூன் 23ஆம் தேதி முதல் தான் பிரச்சனை ஆரம்பித்ததா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜனவரி 16ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருதரப்பினர் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஒன்னும் பண்ண முடியாது! ஆணியடித்தது போல் உட்கார்ந்த ஓபிஎஸ்! எடப்பாடிக்கு முளைத்த சிக்கல்! பாவம் அவரு!
இன்று பரபர வாதங்கள்
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியதும், அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வாதங்களை எடுத்துரைத்தார். பின்னர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஈபிஎஸ் தரப்பு
பொதுக்குழு விவகாரத்தில் அனைத்தும் உரிய நடைமுறைப்படிதான் நடைபெற்றது, எனவே தான் அதனை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவை அங்கீகரித்தது, கட்சிக்குள் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினார் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது. பின்னர் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதங்களை முன்வைத்தார். அதிமுக பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. பொதுக்குழு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி என வாதிடப்பட்டது.
இரட்டைத் தலைமை ஏன்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியை வழி நடத்த தலைமை வேண்டும் என்ற நிலை வந்தபோது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கட்சியில் அதிக ஆதரவு இருந்தது. இருப்பினும் கட்சியின் நலனுக்காக இரட்டை தலைமையை ஏற்படுத்தி இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொதுக்குழு மூலம் பதவிகளை உருவாக்கி கட்சியை வழி நடத்தினர். ஆனால் இரட்டைத் தலைமையால் கட்சியில் முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படிதான் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது என அதிமுக அவைத் தலைவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கட்சியை எப்படி நடத்துவீர்கள்
தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பி, இரு தரப்பிலும் பதில்களைப் பெற்றனர். ஜூன் 22ஆம் தேதி வரை இருவரும் இணைந்து செயல்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே ஜூன் 23க்கு பின்பு தான் தொடங்கியுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், உங்கள் கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இரண்டு பதவிகளில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அதில் தொடர விருப்பமில்லை என்றால் என்ன செய்வீர்கள்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஓபிஎஸ் பதில்
அப்படி ஒரு நிலை உருவானால் இரு பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது. இடைக்கால பொதுச்செயலாளராக வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்கியுள்ளனர். என்னை நீக்குவதற்கு முன் விளக்கம் கேட்டு எந்த நோட்டீஸும் வழங்கவில்லை. ஒற்றைத் தலைமை என்ற விவகாரம்தான் கட்சி செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்சி நலனுக்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தொடர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.