"சாதி அடையாள கயிறுகள் அணியக்கூடாது.. மாணவர்களை கண்டிச்சு வைங்க" : பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாள கயிறுகள் கட்ட தடை விதித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சாதி அடையாள கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர் ஒருவர் பலியானார்.
அதன் எதிரொலியாக, சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு உயிர் போச்சே... பள்ளி மாணவர்களுக்குள் சாதி பாகுபாடா? - விஜயகாந்த் வேதனை
பள்ளிகளில் சாதி பிரிவினை
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே சாதியப் பிரிவினை அதிகமாக காணப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சமீபமாக இந்தப் பிரச்சனை உயிர்பலி வரை செல்வது கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது.
நெல்லை பள்ளி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே செல்வசூர்யா என்ற மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த வாரம் செல்வசூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செல்வசூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக 2 மாணவர்களும் சேர, இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
மாணவர் பலி
இதில் கல்லால் செல்வசூர்யா தாக்கப்பட்டு, அவர் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. பின்னர் தலை வலிப்பதாக அவர் கூறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே செல்வசூர்யா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பெற்றோர் மட்டுமல்லாது பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே, மாணவர்கள் சாதிய மோதல்களில் ஈடுபடுவதற்குக் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
சாதி கயிறுகள் பறிமுதல்
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் விற்கப்பட்ட சாதி அடையாள கயிறுகளையும், சின்னங்களையும் போலிஸார் பறிமுதல் செய்து, அவற்றை விற்க தடை வித்தனர்.
மேலும், அப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று மாணவ- மாணவிகளுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து போலிஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதிரடி உத்தரவு
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான வண்ண கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று அனைத்து பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
மேலும், சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர்.