பரந்தூர் விமான நிலையம்! தமிழக அரசு மூடி மறைக்கக் கூடாது! எஸ்.டி.பி.ஐ. எழுப்பும் சந்தேகம்!
சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு முழு வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர் தெரிவித்த டிட்கோ அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் இடத்தை உறுதி செய்தது எப்படி என்கிற கேள்வி எழுவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும் என்பதால் அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் மக்கள்
கடந்த மாதம், ஏகனாபுரம் உள்ளிட்ட மக்கள் பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விமான நிலைய திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை டிட்கோ தயாரிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

விமானப் போக்குவரத்து
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை இந்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர் தெரிவித்த டிட்கோ அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் இடத்தை உறுதி செய்தது எப்படி என்கிற கேள்வி எழுகிறது. இது குறித்த உண்மைத் தன்மை என்னவென்பதை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

வெளிப்படைத் தன்மை
ஒருபுறம் போராடும் மக்களிடம் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும், மக்கள் பாதிக்காதவாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறிவிட்டு, மறுபுறம் அதற்கு மாற்றமான முறையில் திட்டத்திற்கான பணிகளை செயல்படுத்துவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஆகவே, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு முழு வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications