மகாராஷ்டிரா நிகழ்வுகளுக்கு கண்டனம்.. பாஜகவுக்கு எதிராக திரள மாநில கட்சிகளுக்கு சீமான் அழைப்பு
சென்னை: அதிகாரப்பலத்தைக் கொண்டு தனது எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் ஜனநாயகப்படுகொலை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டநெறிகளையும் குலைத்து பணப்பேரத்தில் ஈடுபட்டு, அதிகார அத்துமீறலை அரங்கேற்றி ஆளுநரின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைப் பிடிக்கும் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.
மராட்டிய மாநிலத்தில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாதபோது ஆளுநர் மூலமாக குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு, தற்போது தேசியவாத காங்கிரசு கட்சியை ஒரே இரவில் பிளவுப்படுத்தி ஆட்சியைப் பிடித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்.
சாதிய, மத உணர்ச்சிகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் எந்தவொரு இயக்கமும் ஜனநாயகத்தை ஒருநாளும் காக்காது என்பதற்கு இதுவே சான்றாகும்.
இத்தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவும், சிவசேனாவும் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவுமே எதிர்கொண்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றது.
பாஜக ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் டெல்லி விரைவு.. சிறப்பு விமானத்தில் பறந்தனர்
பாஜக - சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும் அதிகாரப்பகிர்வில் அவர்களுக்கு இடையே இருந்த முரண் காரணமாக ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால், வழமை போல அதிகாரத்தைக் கையிலெடுத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியப் பாஜக அரசு, தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தேவேந்திர பட்நாவிசை முதல்வராக்கியிருப்பது மக்களாட்சித் தத்துவத்தையே கேள்விக்குள்ளாயிருக்கிறது.
எவ்வித சட்டநெறிமுறைகளுக்கும் உட்படாமல், ஜனநாயக விழுமியங்களைக் கட்டிக்காக்க முன்வராமல், ஆட்சியைப் பிடிப்பதற்காக பணப்பேரத்திலும், அதிகார மிரட்டலிலும் ஈடுபடும் பாஜகவின் இப்போக்கு நாட்டின் ஜனநாயகக்கட்டுமானத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேராபத்து எனக் கண்டிப்பதோடு, மத்தியில் ஆளும் பாஜக அரசின் போக்குக்கு எதிராக மாநிலக் கட்சிகள் அணிதிரள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.