20 மாதங்களில் 20 பேர்.. கொடூரம்.. இத்தனைக்கு பிறகும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- சீமான் ஆவேசம்!
சென்னை : காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல்துறை விசாரணையின்போதே உயிரிழந்துள்ளனர் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
செம்புலிங்கம் உயிரிழப்பு தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்க மறுப்பது காவல்துறையின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

செம்புலிங்கம்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நவம்பர் 25ஆம் தேதி விவசாயி செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் என்பவர் மீது கொடுக்கப்பட்ட சாதாரண புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் செம்புலிங்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், வீட்டில் அருண்குமார் இல்லை என்பதால் ஆத்திரமடைந்து, வீட்டிலிருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

விவசாயி உயிரிழப்பு
இத்தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த மூவரும், அரியலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு விவசாயி செம்புலிங்கம் உயிரிழந்துள்ளார். காவலர்கள் தாக்கியதில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள்தான் செம்புலிங்கம் உயிரிழக்க முதன்மை காரணம் என்று அவரது குடும்பத்தினர் அளித்த புகாரினை ஏற்க மறுத்து, காவல்துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நேரத்தில் விவசாயி செம்புலிங்கம் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் காவலர்கள் தமக்கு இழைத்த கொடுமைகள் குறித்தும், தாக்குதல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்.

தயங்குவது ஏன்?
அதுமட்டுமின்றி அரியலூர் அரசு மருத்துவமனை ஆவணங்களிலும் காவல்துறையினரின் தாக்குதலே செம்புலிங்கம் மீதான உயிர்க்காயங்களுக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் செம்புலிங்கத்தைத் தாக்கிய காவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? சாதாரண புகாருக்காக 8 பேர் கொண்ட காவல்படை, வழக்கிற்குத் தொடர்பில்லாத விவசாயி செம்புலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதும், செம்புலிங்கம் உயிரிழப்பு தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்க மறுப்பதும் காவல்துறையின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

20 மாதங்களில் 20 பேர் பலி
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல்துறை விசாரணையின்போதே உயிரிழந்துள்ளனர். அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான காவல்துறையின் இத்தகைய அதிகார அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அதிகார வல்லாதிக்க கோரமுகமே தொடர்ச்சியாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.

நீதி விசாரணை நடத்திடுக
ஆகவே, தமிழ்நாடு அரசு காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றபுலனாய்வுத்துறையின் கீழ் உரிய நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கத்தின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

போலீசார் கைது செய்யவில்லை?
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. செம்புலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை. செம்புலிங்கம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறையைத் தூண்டும் விதத்திலோ யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications