தீர்ப்புதான் வழங்கப்படுது.. ‘நீதி இல்லை’ - அதிமுக வழக்கு தீர்ப்பு பற்றிய கேள்விக்கு சீமான் பதில்!
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், இங்கு தீர்ப்பு வழங்கப்படுகிறதே தவிர நீதி வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவில்களுக்குச் சென்று வலியுறுத்தி வருகிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கீழமை நீதிமன்ற ஒரு தீர்ப்பு கொடுத்தால், உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு தருகிறது. இப்படி மாற்றி மாற்றி பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன என விமர்சித்துள்ளார்.
ஆட்டத்தை மாற்றும் எடப்பாடி.. '3 கணக்குகள்’ 'கேப்பில் ஏவும் அஸ்திரம்’.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஸ்கெட்ச்!
அன்னைத் தமிழில் அர்ச்சனை
அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்த திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தக் கோரியும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ் வழிபாட்டு உரிமைக் கோரிக்கை என்ற முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை, வீரத்தமிழ் முன்னணி இணைந்து தமிழகம் முழுவதும் தாய்த் தமிழில் வழிபாடு என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
கோவிலுக்குச் சென்ற சீமான்
திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழில் வழிபாடு செய்து இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய வலியுறுத்தினர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு
திருப்போரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், "இது நீதிபதிகளின் விளையாட்டு, நாம் அப்பாவி பிள்ளைகள். நாம் என்ன சொல்வது? ஒரு வழக்கு, ஒரு நாடு, ஒரு சட்டம். ஆனால் எத்தனை தீர்ப்புகள் வழங்கப்படுகிறது?
விடுதலை - தண்டனை - விடுதலை
கீழமை நீதிமன்றத்தில் விடுதலை, உயர் நீதிமன்றத்தில் தண்டனை, உச்ச நீதிமன்றத்தில் விடுதலை. கீழமை நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்தால், உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு தருகிறது. இப்படி மாற்றி மாற்றி பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. நீண்ட நெடுங்காலமாக இங்கு தீர்ப்பு வழங்கப்படுகிறதே தவிர நீதி வழங்கப்படுவதில்லை.
எங்கள் பிரச்சனை அல்ல
அதிமுகவில் நடப்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அது எனக்கோ நாட்டு மக்களுக்கோ பிரச்சனை அல்ல. இதற்குமேல் இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக விவகாரம் பற்றி என்னிடம் என்ன கருத்தை எதிர்பார்க்கிறீர்கள்" எனத் தெரிவித்தார்.