விரைவில் 4,308 மருத்துவ பணியாளர்கள் தேர்வு பணி நிறைவடையும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை : தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வரும் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளாகவும் அவர் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனர்களுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கினார். பின்னர், போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவாது : 1794-ம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தினசரி 350 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோல் 43 இடங்களில் அரசு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இன்று 520 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 311 ஆண்கள், 209 பெண்கள் அடங்குவர் என்றார். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
சாதாரண மக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்றால் அவர்களின் ஆண்டு வருமானம் 1.20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வரம்பும் இல்லாமல் அவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் உள்ளிட்ட 4308 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவ மையங்களை மூடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீடு விசாரணையில் நல்ல நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications