“செங்கோட்டையன் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.. குறுக்கே சிலர்”.. கேபி முனுசாமி அட்டாக்!
சென்னை: செங்கோட்டையன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் என்றும், தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
"சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்ளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்திக்கையில், "சைதை துரைசாமிக்கு எதிர்ப்பு வலுப்பதற்குக் காரணம் களத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள். கட்சிக்காக அர்ப்பணித்து உழைக்கும் அதிமுகவினரை வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி விமர்சிக்கிறார். அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அதிமுகவினரின் எதிர்வினை.
செங்கோட்டையன் எங்கள் கழகத்தின் முன்னோடி. அவர் அவருடைய பணிகளை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று நிதி அமைச்சரை பார்த்தார். அவ்வளவுதான். சிலர் தான் கண், மூக்கு வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா அழைத்துப் பேசியதாக கூறப்படுகிறது.
இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்களும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசி வருகின்றனர். மேலும், ஒன்றிய பாஜக அரசு, செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துரைசாமி வலியுறுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் நிலையில், சைதை துரைசாமி இவ்வாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, சைதை துரைசாமியை காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications