வருமான வரி சோதனையில் இருந்து தப்பிய கையில் இருந்த ரூ377.... மூத்த இ.கம்யூ தலைவர் மகேந்திரன் அனுபவம்
சென்னை: வருமான வரிதுறை அதிகாரிகள் தமது அறையில் சோதனை நடத்தியது குறித்தும் இந்த சோதனையில் இருந்து தமது கையிருப்பு ரூ377 பாதுகாப்பாக இருந்தது குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி. மகேந்திரன் சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சி. மகேந்திரன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நேற்று நள்ளிரவு, சரியாக 1.00 மணி. தேர்தல் பணிக்காக தேன்கனிக்கோட்டை ' சிட்டி' வாடகை விடுதியில், ஒரு நபர் தங்கிக் கொள்ளும் அறையில் இருந்தேன்.
கதவு தட்டப்பட்டது. திறந்துப் பார்த்தேன்.
வாசலில் நவீன தூப்பாக்கி ஏந்திய மூன்று ராணுவ வீரர்கள். ஐந்து பேர் கொண்ட வருமான வரி அதிரடி குழு.
'என்ன வேண்டும்' என்று கேட்டேன்.
' சோதனை' என்றார்கள்.
'செய்து கொள்ளுங்கள்' என்றேன்.
அறையில் சோதனை செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மாலைதான்,கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முயற்சிகள் தளித் தொகுதியில் நடைபெறுகிறது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னேன். அன்று இரவே என் அறையில் சோதனை நடக்கிறது என்றால் இதைப் பார்த்து, எனக்குள் சிரித்துக் கொள்வதை தவிர வேறு நான் என்ன செய்ய முடியும்?
வருமான வரித்துறை அதிகாரி பீகாரைச் சேர்ந்தவர். அவரும் அவரது குழுவினரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
அவர்கள் சென்ற உடன் என்னிடமிருந்த பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்தேன்.
மொத்தம் 377ரூபாய்இருந்தது.
இவ்வாறு சி.மகேந்திரன் பதிவு செய்துள்ளார்.