முரசொலி மாறனைப் போல பொதுக்குழுவில் சாட்டையை சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்.. சீனியர்கள் நெகிழ்ச்சி
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டங்களில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தயவு தாட்சன்யம் பார்க்காமல் தவறு செய்தவர்களை வறுத்தெடுத்துவிடுவார்; இன்றைய திமுக பொதுக்குழுவில் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதே பாணியை கையில் எடுத்தது நெகிழ்ச்சியை தருகிறது என்கின்றனர் அக்கட்சியின் சீனியர்கள்.
சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுகவின் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
14 வயதிலிருந்து பொது வாழ்வு.. வளர்ச்சி பாதை நாயகன்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து
கனிமொழி தேர்வு
மேலும் திமுக முதன்மைச் செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்களாக அமைச்சர் இ.பெரியசாமி, அமைச்சர் அமைச்சர் க.பொன்முடி, திமுக எம்.பி. ஆ.ராசா, திமுக எம்.பி. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளராகக் கனிமொழி எம்.பி. புதிதாக செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அமைச்சர்கள் பேச்சுக்கு கண்டனம்
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரையும் விட்டு வைக்காமல் சாட்டையை சுழற்றி வீசினார். குறிப்பாக அமைச்சர்களின் பேச்சுகள், நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கடுமையான எச்சரிக்கையையும் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்களின் இந்த சர்ச்சை பேச்சுகளால் தூக்கமே போய்விட்டது; விழித்து எழுந்தால் எந்த பிரச்சனையை யார் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ என்கிற கவலை இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
பூத் கமிட்டி போடுங்க
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் திராவிட இயக்க பாசறை கூட்டங்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் அதை வீதி தோறும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உட்கட்சி தேர்தல் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தலுக்கான பூத் கமிட்டி 2 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார். கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என்கிற நிலைமையை கண்டித்தார். திமுகவின் அணியினரின் செயல்பாடுகளுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டை மறைமுகமாகவும் சுட்டிக்காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
முரசொலி மாறன் பாணி
திமுக மீதான பொதுவெளி விமர்சனங்களுக்கு யார் யார் காரணமோ அத்தனை பேரையும் சுட்டிக் காட்டி கிலியை ஏற்படுத்திவைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சியாக பொதுக்குழுவில் முரசொலி மாறன் இப்படித்தான் பேசுவார்; இன்று முதல்வர் ஸ்டாலினும் பட்டவர்த்தனமாக பெயரை மட்டும் சொல்லாமல் எல்லாவற்றையும் போட்டு உடைத்திருக்கிறார்.. இது மிகவும் ஆரோக்கியமான நிறைவைத் தருகிறது என நெகிழ்கின்றனர் சீனியர் திமுக நிர்வாகிகள்.