பண்ருட்டியார் போட்டுக் கொடுத்த ‘ஸ்கெட்ச்’! ஓபிஎஸ் தரப்புக்கு தாவிய ‘சீனியர்’! கடுப்பான எடப்பாடி!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களில் பண்ருட்டி ராமச்சந்திரன், மைத்ரேயன் உள்ளிட்ட பல சீனியர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக திரும்பி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் அதிமுகவினரிடையே அவர்கள் கட்சி விவகாரத்தை பேசுவதற்கே நேரம் போதவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்த பிறகு சசிகலா டிடிவி தினகரனை ஓரம் கட்டி விட்டு ஓபிஎஸ் உடன் கைகோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போதிருந்தே இலை மறை காயாகவே மோதல் நீடித்து வந்தது.
அதிரடி மோடில் எடப்பாடி.. 17, 20, 26ம் தேதிகளில் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டங்கள்!
ஒற்றை தலைமை
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. இதை அடுத்து பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. அந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சட்ட போராட்டங்கள் மூலம் அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார்.
சீனியர்கள் ஆதரவு
இடையில் சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்க சில சார்பான நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்ததால் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி உள்ளது. தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரும் சீனியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பண்ருட்டி ராமச்சந்திரன்
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவரது நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவரைக் கட்சியின் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்க, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தினமும் ஓ.பன்னீர்செல்வமும் அவருடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
மைத்ரேயன்
இந்த நிலையில் கடந்த பொதுக்குழு வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் எம்பியும், அதிமுக சீனியருமான மைத்ரேயன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். கட்சியை ஒருங்கிணைக்க ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும் என அவர் தடாலடியாக பேசியதை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதேபோல் தான் கடந்த சில நாட்களுக்கு முன் மற்றொரு சீனியரான தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபரும் முன்னாள் எம்பியுமான முத்து கருப்பன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சந்தித்து பேசினார்.
அணி தாவ வாய்ப்பு?
இவர்கள் மட்டுமல்லாது கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், சீனியர்களை ஒன்றிணைத்து அவர்களை ஓபிஎஸ் முகாமில் சேர்க்கும் நடவடிக்கைகளை பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவருக்கு சசிகலாவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றிருக்கும் நிலையில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் யாருடன் பேசுகிறார் என்பது குறித்தும் அதிமுகவில் அணி தாவ வாய்ப்புள்ள நிர்வாகிகள் குறித்து கணக்கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.