செந்தில் பாலாஜிக்கு புதிய "சலுகை"! கவலையான முகத்துடன் ஸ்கை ப்ளூ சட்டையில் கோர்ட்டுக்கு வந்த மாஜி
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவரை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மிகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த 17 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜி காணொளி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 33 ஆவது முறையாக ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கின் அசல் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடைய நீதிமன்றக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புழல் சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் காரில் இருபுறமும் போலீஸார் அமர்ந்திருந்தனர். முன்பு போலீஸ் வேன் சென்றது. பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜி லேசான நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். முகத்தில் அத்தனை சோகம் தென்பட்டது. தலை நிமிராமல் குனிந்தபடியே அவர் அமர்ந்திருந்தார்.
அவரது உடல் எடை வெகுவாக காணப்பட்டிருந்தார். இதை கண்ட அவருடைய ஆதரவாளர்கள் வேதனை அடைந்தனர். மேலும் 5 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டார். வழக்கமாக கைதிகளை அழைத்து வரும் வாகனத்தில் இல்லாமல் ஏசி வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய எஸ்கார்டுடன் அழைத்து வரப்பட்டார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடியும் வரை செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடமாட்டார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது தேர்தலும் முடிந்த நிலையில் அவருக்கு 34-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. கிட்டதட்ட 250 நாட்களுக்கு மேல் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். அவ்வப்போது அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் சிறையில் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்.












Click it and Unblock the Notifications