கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும்.. அதை விட்டுட்டு போஸ்டர் அடிப்பதா? வானதி சீனிவாசன் அட்டாக்!
சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக நேற்று ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆன நிலையில் இன்று சென்னையின் பிரதான சாலையோரம் உள்ள சுவர்களில் இதே வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் மாற்றுக் கருத்துக்கள் இருக்கிறது என்றால் கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மீது அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக முரசொலியில் தலையங்கத்திலும் ஆளுநருக்கு எதிராக காட்டமான கருத்துகளில் கட்டுரைகள் வெளியாகி வந்தன.

சட்டசபை கூட்டம்
இப்படி சில விவகாரங்களில் ஆளுநருக்கும் - தமிழக ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், நேற்று இந்த ஆண்டின் சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. இதில் மரபுப்படி தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால், ஆளுநர் ஆர். என். ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் தவிர்த்துவிட்டார்

ஆளுநர் வெளிநடப்பு
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை. இது தனக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அரசு தயாரித்த மொத்த உரையும் அவைக்குறிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்த போதே.. அவையில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

#GetOutRavi என்ற ஹேஷ்டேக்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் நேற்று டிரெண்ட் ஆனது. இன்று ஹேஷ்டேக் சென்னையின் பிரதான சாலைகளின் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை டிரென்டாக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த போஸ்டரை திமுக பிரமுகர் ஒட்டியுள்ளார். தற்போது மீண்டும் ட்விட்டரில் டிரென்டாகியுள்ளது .அது போல் #MKStalin என்ற ஹேஷ்டேக்கும் டிரென்டாகி வருகிறது.

சீனிவாசன் பேட்டி
இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் இது குறித்து பேசியதாவது:- மாற்றுக் கருத்துக்கள் இருக்கிறது என்றால் கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டுவோம்.. ஒரு போராடக் கூடிய மனநிலைக்கு வருகிறீர்கள் என்றால் எந்த அளவுக்கு கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு உங்களுக்கு இருக்கிறது என்பதைத்தான் அது காட்டுகிறது. ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரு நாட்டிலே இதுபோன்று லெவலை குறைச்சிட்டு தெருச்சண்டை போல இதை பண்ணுவோம் என்பது அவர்களுடைய மதிப்பை குறைத்துக்கொள்வதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.

அழைப்பு வந்தது என்றால்
அப்போது பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "தமிழக ஆளுநர் என ஊடகங்கள் குறிப்பிடலயா.., மாநில அரசு தன்னுடைய விளம்பரத்தில் தமிழகம் என சொல்லவில்லையா.. தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா.. இந்திய ஒருமைப்பட்டுக்கு எதிரான வார்த்தையா.. இன்னைக்கு பேசுவதற்கு மக்களோட பிரச்சினை நிறைய உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் திசை திருப்புவதற்காக எது பிரச்சினை இல்லையோ.. அதை பிரச்சினையாக மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால், ஏன் இப்படி அழைப்பு வந்தது என்றால் என்னால் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications