ஸ்மார்ட் சிட்டி ஊழல் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் டேவிதார்!
சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான செலவில் 50 சதவிகிதம் மத்திய அரசும், 50 சதவிகிதம் மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.490 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்தது. கோவைக்கு ஒன்றிய அரசு ரூ.490 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் ஒதுக்கியது. ஈரோட்டுக்கு ஒன்றிய அரசின் பங்கான ரூ.490 கோடியில் ரூ. 294 கோடியும், தமிழக அரசின் பங்கான ரூ.500 கோடியில் ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டன.

தி.நகரில் தேங்கிய மழைநீர்
இதனிடையே கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கியது. இதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காததே காரணம் என்று திமுக குற்றம்சாட்டியது. இதனைத்தொடர்ந்து மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

விசாரணை ஆணையம்
தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மே மாதத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற பல்வேறு நகரங்களில் விசாரணை மேற்கொண்டது.

பல்வேறு விவரங்கள் சேகரிப்பு
அதேபோல் பொது மக்களின் நலன் கருதி இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் திட்ட விதிமுறைகளை கடைபிடித்து தேர்வு செய்யப்பட்டுள்ளதா, தேர்வு செய்யப்பட்ட திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வளர்ச்சியை கொண்டுள்ளதா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் நடந்ததா, மத்திய அரசும் தமிழக அரசும் ஒதுக்கீடு செய்த நிதி உரிய விதிகளின்படி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவரான டேவிதர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக அறிக்கை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications