அரசியல் ஆக்டிவ் இல்லாதவருக்கு பதவி.. அதுவும் ‘அன்புமணியின்’ பதவி? பாமகவில் அதிருப்தி குரல்கள்
சென்னை : பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற நிலையில் அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி முன்னாள் தலைவர் ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக பாமகவில் மோதல் வெடித்துள்ளதாகவும் தமிழ் குமரனுக்கு பதவி வழங்க சில முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய அமைச்சர், நாடாளுமன்ற என பல பதவிகளை வகித்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி பாட்டளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கனவே பாமக தலைவராக இருந்த ஜிகே மணி கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அன்புமணி வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவியை பெறப் போவது யார் என கேள்விகள் எழுந்தது.

பாமக இளைஞரணி தலைவர்
இளைஞரணி தலைவர் பதவி என்பது அடுத்த தலைவர் போல் என்பதால் பல முக்கிய தலைவர்களும் காய் நகர்த்தி வந்தனர். இறுதியில் அதனை சாதித்துக் காட்டினார் ஜிகே மணி. தனது மகனும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும், லைகா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு பதவியை ராமதாஸ் மூலம் பெற்று விட்டார். அன்புமணிக்காக தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார் என்பதற்காக அவரது மகனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜிகேஎம் தமிழ்குமரன்
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து இளைஞனை தலைவர் நியமன கடிதத்தையும் பெற்றுக் கொண்டார் இந்த நிலையில் அரசியலில் அவ்வளவாக ஈடுபடு காட்டாதவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுத்திருப்பதை சில பாமக நிர்வாகிகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அரசியலில் ஆக்டிவ்
இது தொடர்பாக புருசோத்தமன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில்,"அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாதவருக்கு பாமக இளைஞர் அணி தலைவர் பதவியா? தமிழக அரசியலில் ஒரு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. கிட்டத்தட்ட அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்படும் அளவு முக்கியத்துவம் உள்ள பதவி. திமுகவில் முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தற்போது உதயநிதி ஸ்டாலினும் வகித்து வரும் பதவி. பாமகவிலும் அப்பதவி டாக்டர் அன்புமணி அவர்களால் வகிக்கப்பட்டது.

தவறான முன்னுதாரணம்
இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாத திரு. தமிழ்குமரன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். வாரிசு அரசியல் என்பதை தாண்டி அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாத, முழு நேர அரசியல்வாதியாக இல்லாத ஒருவரை மிகுந்த பொறுப்பும் கடமையும் உழைப்பையும் கோரும் ஒரு முக்கிய பதவிக்கு அதுவும் கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி வகித்த பதவியை கொடுக்க வேண்டிய நிலை ஏன்? அப்படி என்ன நெருக்கடி பாமகவுக்கு? என்ற கேள்வி பாமகவை தாண்டி அரசியல், பொதுமக்கள், மீடியா வட்டாரத்தில் எழுகின்றது." என பதிவிட்டுள்ளார்.

டாக்டர் அன்புமணி
மேலும்,"டாக்டர் அன்புமணி மட்டும் வாரிசு இல்லையா, அவரை ஏற்கவில்லையா என கேட்பவர்களுக்கு, டாக்டர் அன்புமணி அவர்களின் அரசியல் பிரவேசம் என்பது இந்த இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு தரப்பட்டுள்ளது, நிர்வாகத்திலும் அமைச்சரவையிலும் சாதித்து தன்னை நிரூபித்த பின் நீண்ட நெடும் காலத்திற்கு பின்பே தலைவர் பதவி தரப்பட்டுள்ளது. பாமகவில் எப்போதுமே அய்யா ஒருவரே, அவர் பிடித்தால் தான் பிள்ளையார் இல்லை எனில் சாணி என நானே பல முறை எழுதியுள்ளேன், ஆனால் டாக்டர் அன்புமணி விசயத்தில் மட்டும் இதில் விதி விலக்கு உண்டு.

தந்தையை பிரியாத மகன்
ஒரு உதாரணம் சொல்கிறேன், 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுக நண்பர் ஒருவரிடமும், மீடியா நண்பர் ஒருவரிடமும் தேர்தல் நிலவரம் குறித்து பேசிய போது அவர்கள் என்னிடம் சொன்னது டாக்டர் அன்புமணிக்கு அவர் இருக்கும் பாமக என்ற கட்சி தான் நெகட்டிவ் இமேஜ், அவர் மட்டும் பாமகவை விட்டு விலகி தனியாக நின்றால் அவர் தான் முதல்வர், அவ்வளவு நல்ல பெயர் பொது மக்களிடம் என்றார். அந்த நேரத்தில் முதல்வர் போட்டியில் இருந்தவர்கள் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும். எத்தனை பெரிய முதல்வர் பதவி வந்தாலும் தந்தையை பிரியமாட்டார் டாக்டர் அன்புமணி, பாட்டாளிகளுக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் அய்யாவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றேன் அப்படி சொன்ன நண்பர்களிடம்.

ஜி.கே.மணி
கெளரவ தலைவர் ஜி.கே.மணி அவர்கள் அய்யாவிற்கும் இயக்கத்திற்கும் தோளோடு தோள் நின்று நீண்ட காலம் உழைத்தவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த பதிவு முழுக்க முழுக்க நியமனம் எப்படி ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும் என்பது தானே தவிர கெளரவ தலைவரின் உழைப்பையும் அவரின் அனைவரிடமும் பழகும் தன்மையையும் எப்போதும் போற்றுபவன் நான். தலைமையில் கம்யூனிகேசன் கேப் ஏதும் இருந்தால் அவைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும், இந்த இயக்கம் தலைமுறைகளை தாண்டி கொண்டு செல்லப்பட வேண்டிய இயக்கம், இனி இப்படி ஒரு இயக்கத்தை சமூகத்திற்காக கட்டவும் முடியாது, பிறர் இனி இதுபோல கட்டவும் விடமாட்டார்கள் எனும் போது இந்த இயக்கத்தை பாதுகாத்து கொண்டு செல்லும் பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உண்டு." என பதிவிட்டுள்ளார்.

நிர்வாகிகள் அதிருப்தி
அவரது பதிவில் பாமகவினர் பலரும் ஜிகேஎம் தமிழ்குமரனின் நியமனத்திற்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தலுக்கு பிறகு கட்சி நிகழ்வுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத தமிழ் குமரனுக்கு பதவி வழங்கியது தொடர்பாக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர் ராமதாஸ் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாமகவினர் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என்பதை பாமகவில் பேசு பொருளாகவும் உள்ளது. இதனிடையே தமிழ் குமரனின் நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications