இப்பவே போனாதான் சரி! நேரம் பார்த்து காலை வாரிய கோவை செல்வராஜ்! மொத்தமாய் பறக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலைமை கிட்டத்தட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டு விட்டதாகவே தற்போது பொதுவெளியில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அவர் அணியில் இருக்கும் மேலும் பல முக்கிய தலைவர்களும் கட்சி மாறலாம் என்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.
ஜூன் மாதம் ஆரம்பித்த அதிமுக ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை டிசம்பர் மாதம் ஆகியும் ஒரு முடிவுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேராக அதிகார தலைமையை கைப்பற்றுவதற்கு போராடி வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றுவதற்கு கிட்டத்தட்ட நான்கு அணிகள் அதிமுகவில் மல்லுக்கு நிற்கிறது. அவர் நினைவு நாளில் கூட உறுதிமொழி ஏற்பதில் நான்கு அணிகளாகவே அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அதிமுக 'தேசியம்’.. திராவிடம் அப்புறம் தான்.. பாஜகவும் சேர்ந்து வளருது.. கேபி ராமலிங்கம் பரபர பேச்சு!
அதிமுக விவகாரம்
சசிகலா, டிடிவி தினகரன் விலகலுக்குப் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவாக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியது கட்சியினரிடையே மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது. அதே நேரத்தில் கடந்த முறை போல் அல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாகவே நிற்கின்றனர். எம்எல்ஏக்களில் வைத்தியலிங்கம், உசிலம்பட்டி ஐயப்பன் தவிர அனைவருமே எடப்பாடிக்கு தீவிர ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் என அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
ஓபிஎஸ் பலப்பரிட்சை
அதே நேரத்தில் தொண்டர்கள் என் பக்கம் என ஓபிஎஸ் பலப்பரிட்சை நடத்தி வந்தாலும் பாஜக தலைமையுடனான நெருக்கமே அவரது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. இப்படி நீண்ட நெடிய போராட்டம் ஆறு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு வராத நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் வந்தது. இதனால் உற்சாகமடைந்துள்ள இபிஎஸ் தரப்பு அதிமுகவின் வருங்காலம் எடப்பாடி தான் அதனை பாஜக தலைமையை அங்கீகரித்து விட்டது. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முடிவு தான் இறுதி அதிலும் எடப்பாடிக்கு வெற்றி கிடைக்கும் என உற்சாகமாக கூறி வருகின்றனர்.
கடும் அதிருப்தி
இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக உற்சாகத்தில் இருந்த அவர் தரப்பு தற்போது பின்னடைவை சந்தித்து இருக்கிறது. கட்சியில் முக்கிய முகமாக அறியப்பட்ட கோவை செல்வராஜ் திடீரென விலகலை அறிவித்ததும், அவர் திமுகவில் இணையப் போவதாக வரும் செய்திகளும் மேற்கண்ட செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றன. அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அணி தாவும் தலைகள்
இதுவரை ஓ.பன்னீர் செல்வத்துக்காக ஊடகங்களிலும் நீதிமன்றத்திலும் நேரடியாக பேசி வந்த சில முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அவர் அணியில் இருந்து விலகி எடப்பாடி தரப்பில் தஞ்சம் அடையலாம், இல்லையெனில் திமுக தரப்பில் இணையலாம் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக உட்கட்சி பிரச்சனைகளை நீண்ட காலம் எடுத்துச் செல்ல விரும்பாத பாஜக தலைமை அதற்கு ஒரு முடிவு காண விரும்புகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் கையே ஓங்கி இருப்பதால் அவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவில் ஐக்கியம்
அதனால் தங்கள் ஆதரவை எடப்பாடி தரப்புக்கே வழங்கலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பிலே இருந்தால் அவரைப் போல தங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதால் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் முக்கிய புள்ளிகள் சிலர் இந்த தகவல் முடிவை எடுத்திருப்பதாகவும் அடுத்தடுத்து நாட்களில் கோவை செல்வராஜ் போல் பலர் விலகலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அவர்களும் எடப்பாடி தரப்பிலோ அல்லது திமுகவில் தான் இணைவார்கள் பாஜகவுக்கு செல்ல வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.