மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகுது ஒரு ‘க்ரூப்’.. சீண்டிய ஈபிஎஸ் டீம்! கேள்விக்கு எஸ்கேப் ஆன ஜெயக்குமார்!
சென்னை : "சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்.. கோபப்படுகிறார்கள், நிருபர்களை திட்டுகிறார்கள், அப்படியும் ஒரு குரூப் இருக்கத்தான் செய்கிறது" என மறைமுகமாக சீண்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மேலும், பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கும் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆனார் ஜெயக்குமார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு, 'நான் ஜோசியக்காரன் இல்ல' என பட்டென கூறினார் ஜெயக்குமார்.
ஆளுநர் மீது திமுக புகார் அளித்ததால்தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் ஆளுநர் ரவி என பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புலி கோழியாகி போச்சே.. அவ்ளோ பெரிய ஆள்.. ஈபிஎஸ் பின்னால் போவது அசிங்கம்! 'மாஜி'யை சீண்டிய புகழேந்தி!
ஆளுநர் விவகாரம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்ற வகையில் செயல்படுகிறார். ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழர் பண்பாடு, அண்ணாவை பின்பற்றுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஒருமையில் பேசுவது தான் தமிழர் பண்பாடா? அண்ணா ஒருபோதும் தனக்கு எதிர்நிற்பவர் மேல், விமர்சனங்களை வைக்கவோ, கடுஞ்சொற்களை பிரயோகிக்கவோ மாட்டார். இந்த விஷயத்தில் கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும்.
காக்கா உட்கார பனம்பழம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப்போய் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்துப் பேசுவதற்குத் தான் ஆளுநர் ரவி டெல்லி சென்றிருக்கிறார். ஆனால் திமுக குடியரசுத் தலைவரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே, ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்தி வருகின்றனர், காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான் நினைவுக்கு வருகிறது" எனத் தெரிவித்தார்.
கதவு மீண்டும் திறக்காது
மேலும், 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வாழ்வும் நிச்சயமாக இல்லை. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காது" எனத் தெரிவித்தார்.
மைக்கை பார்த்தாலே டென்ஷன்
மேலும், எல்லோரும் மரியாதையோடும், தமிழர்களின் பண்பாட்டோடும் நடந்துகொள்ள வேண்டும், எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜெயக்குமார், "சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள்.. கோபப்படுகிறார்கள், நிருபர்களை திட்டுகிறார்கள், அப்படியும் ஒரு குரூப் இருக்கத்தான் செய்கிறது" என்றார். யாரைச் சொல்கிறீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்" என்று சூசகமாகச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.
ஜோசியக்காரன் இல்லை
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை பாஜக எதிர்கொண்டது. இந்தக் கூட்டணி தொடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா என்பது குறித்து கேள்வி எழுப்ப, "நான் ஜோசியக்காரன் கிடையாது" என்று கூறிவிட்டு அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் ஜெயக்குமார்.