தென்மேற்கு பருவமழை சில தினங்களில் விடைபெறும்..நடப்பாண்டு 17 சதவிகிதம் கூடுதல் மழை - பாலச்சந்திரன்
தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை விரைவில் விடைபெறப்போவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவை விட 17 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். கடந்த ஜூன் மாதம் கேரளாவில் பெய்த மழை தமிழகத்திற்கு தென் மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கணிசமான அளவு பெய்தது.

தென்மேற்குப் பருவமழை விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது. நடப்பாண்டு பருவமழை பதிவான அளவு குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 39 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது, இயல்பு அளவு 33 செ.மீ, இது இயல்பை காட்டிலும் 17% கூடுதலாக கிடைத்துள்ளதாக கூறினார்.
சென்னையை பொறுத்தவரையில் பதிவான மழை அளவு 50 செ.மீ, இயல்பான அளவு 46 செ.மீ இது இயல்பை விட 7% கூடுதலாகும் என்றார். 26 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டி பதிவாகி உள்ளதாகவும், 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாவும் ஒரு மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் இயல்பை விட 68% கூடுதலாக கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் உள் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறினார்.
அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்களுக்கு, கிழக்கு திசையிலிருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசுவதால் தற்போதைய மழை நிலவரம் தொடரும் எனவும் அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை குறித்த நீண்ட கால அறிவிப்பு இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications