18 வயது ஆகிவிட்டதா..வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க..திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு..பயன்படுத்திக்கங்க
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. 18 வயதானவர்கள், இடம் மாறி சென்றவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை பெறப்படுகிறது.
பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து 2வது கட்டமாக சிறப்பு முகாம் இன்றும் நாளையும் இரு நாட்களும் நடைபெறுகின்றன.
வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். சென்னையில் கடந்த முகாமில் 23,519 பேர் திருத்தம் மேற்கொள்ள மனுக்கள் கொடுத்தனர். அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..17 வயதானவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. தேர்தல் ஆணையர் சத்யபிரதா!
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒவ்வொரு மையங்களிலும் ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 2வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்றும்,நாளையும் 2 நாட்கள் நடக்கிறது.
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், வார்டுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் https://www.nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ஆகிய இணையதள முகவரி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.