இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த இலங்கை அமைப்புகள்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவ வேண்டும் என இலங்கை அரசின் தமிழ் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் இந்தியாவில் உள்ள கட்சிகளை அணுகி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.
இலங்கை முழுவதும் சமத்துவத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் கூட்டமைப்புகள்
இரண்டு வாரங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு, ஆறு தமிழ்க் கட்சிகள் கடிதம் அனுப்பியிருந்தன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனும், உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரனும், திமுக அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். மற்ற முதல்வர்களை பொறாமைப்பட வைக்கிறார் என்று தெரிவித்திருந்தன.

சந்திப்பு
இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், இலங்கை சமூக உட்கட்டமைப்பு துறையின் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது
இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்து பேசியிருக்கிறார்கள்.

கோரிக்கை
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கையிலுள்ள மலையக தமிழர்கள் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டிற்கு பல்கலைக்கழகம் அமைக்க தரக் கோரியும் மேலும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் தமிழக முதலமைச்சரிடம் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்கள்.

மீனவர் பிரச்சனை
இலங்கையிலுள்ள மீனவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்த கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை சில மாற்றங்களை கொண்டு வந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்று செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

முக ஸ்டாலின்
எங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தெரிவித்தோம். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார் என இலங்கை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் உதவக்கூடிய வகையில் இந்திய அரசு பல்வேறு தொழில் நடவடிக்கைகளை அங்கு மேற்கொண்டு வருவதாகவும் வரும் காலங்களில் இலங்கையில் உற்பத்தியை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications