திருப்பி அடிப்பாரா? ‘அண்ணாமலையை எப்படி டீல் பண்ணனும்னு ஸ்டாலினுக்கு நல்லா தெரியும்’ கி.வீரமணி பளிச்!
சென்னை : அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்கு தெரியும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகள் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து வழிபட்டவர்கள் தான் பாஜகவினர் என்றும், அதனால்தான் அவர்களுக்கு செருப்பின் மீது மோகம் அதிகரித்துள்ளது என்றும் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படும் சிறந்த தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார் என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழக முதலமைச்சருக்கு நன்கு தெரியும் என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.

பெரியார் பிறந்தநாள்
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தி.க தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவார்
செப் 17 அன்று பெரியார் பட ஊர்வலம், ஒலிபெருக்கி மூலமாக பெரியார் இசைப்பாடல்கள் என கொள்கைப் பிரச்சார விழாவாகவே நடத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு அங்கு 9 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் அமைய உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படும் சிறந்த தலைவராக ராகுல் காந்தி உள்ளார். ஒருபோதும் திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படும் துணிவு பாஜகவுக்கு இல்லை. அதனால் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருகின்றனர்." எனத் தெரிவித்தார்.

செருப்பை வழிபட்டவர்கள்
நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, 14 ஆண்டுகள் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து வழிபட்டவர்கள்தான் அவர்கள். அதனால்தான் அவர்களுக்கு செருப்பு மீதான மோகம், காதல் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு தெரியும்
மேலும், அடித்தால் திருப்பி அடிப்பேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, அது அவரது தரத்தை காட்டியுள்ளது. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்கு தெரியும்" எனப் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications