இந்தி திணிப்பை விட்டுட்டு பெட்ரோல் விலைய குறைங்க! - அமித்ஷாவுக்கு வேல்முருகன் அட்வைஸ்
சென்னை: இந்தி திணிப்பை கைவிட்டுவிட்டு மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை நாட்டின் ஒருமைப் பாட்டின் அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது.
வெவ்வேறு மொழிகளில் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது இந்தி மொழியில் இருக்க வேண்டும்.

அமித்ஷா பேச்சு
இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையில் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசாத இரு வேறு மாநில மக்கள் கூட இனி இந்தி மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பல தேசங்களின் ஒன்றியம் இந்தியா
இந்தியா என்பது பல தேசங்களின் ஒன்றியம் என்பதையும், பன்முகத்தன்மை வாய்ந்தது என்பதையும் புரிந்து இருந்தாலும் கூட, ஒரே நாடு ஒரே மொழி என்பதை மீண்டும் மீண்டும் நிறுவ முயலுகிறார் அமித்ஷா. இது ஏற்புடையதல்ல ஒரே நாடு ஒரே மொழி என்று நிறுவ முயல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதிக்கும். 8வது அட்டவணையின் படி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக இந்தித் திணிப்பிலேயே ஒன்றிய அரசு முனைப்பு காட்டி, இந்தி மட்டுமே என்ற ஒரே மொழி கொள்கையை நிறுவ முயலுவது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தியாவின் விடுதலைக்கு பிறகு, இந்தி மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயன்றபோது, மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு மட்டுமின்றி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிரான பெரும் கிளர்ச்சிகள் நடந்துள்ளன. இந்த கிளர்ச்சிக்கு பிறகு தான், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தொடரும் என்று அன்றைய பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்க
பேரறிஞர் அண்ணா கூறியது போல், தமிழ், ஆங்கிலம் என இருமொழிக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட, தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழே முதன்மை மொழியாக இருக்க வேண்டும் என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து.
எனவே, இந்தி திணிப்பு கொள்கையை கைவிட்டு, நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கலான, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு, சுங்கக் கட்டணம், மருந்துகளின் விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications