எல்லோரோட DNAவும் ஒண்ணு.. திரா+விடா.. “தமிழ்நாடு” மேட்டரில் ஆளுநருக்கு சப்போர்ட்டாக வந்த சு.சுவாமி!
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். "தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம்." என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக, அதிமுக என பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரின் கருத்தை வரவேற்றுள்ளார்.

தமிழ்நாடு - தமிழகம்
சமீபத்தில், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். இப்போது பாரதத்தைப் பற்றி பலரும் பேசுவது கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்" என்று கூறினார்.

கடும் எதிர்ப்புக் குரல்கள்
ஆளுநரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனக் குரல்கள் கடுமையாக ஒலித்தன.

சு.சுவாமி ஆதரவு
ஆளுநரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ட்விட்டரில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. ஆளுநரின் பேச்சுக்கு மாறாக, தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர், தமிழறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பகுப்பாய்வில் அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏவை கொண்டுள்ளனர். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம். திராவிடம் என்பது ஆதி சங்கரரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஆரியன் என்பது போலியாக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட வார்த்தை" எனத் தெரிவித்துள்ளார்.

திரா + விடா
மேலும், "ஆதி சங்கரர் முதல் மந்தன மிஸ்ரா வரை தென்னிந்தியர்களுக்கு திராவிடம் என்பது மற்றொரு பெயர். திரா என்பது மூன்று. விடா என்பது கடற்கரையுடன் கூடிய உள்ள கடல்கள். எனவே திராவிடம் என்றால் மூன்று கடற்கரைகளுக்குள் வாழும் இந்தியர்கள் என்று பொருள்." என்று சுப்பிரமணியன் சுவாமி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications