கருணாநிதியின் மனசாட்சி! ஒரு காலத்தில் திமுகவின் மூளை! வாஜ்பாயை கவர்ந்த முரசொலி மாறன்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அபூர்வ அரசியல்வாதியாக திகழ்ந்து மறைந்த முரசொலி மாறனுக்கு இன்று 89-வது பிறந்தநாள்.
பட்டாசு வெடிப்பதை போன்று படபடவென்ற பேச்சு, புகழ்ச்சியை விரும்பாத குணம், வில்லில் இருந்து பாயும் அம்பை போன்ற வேகம் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் முரசொலி மாறன்.
ஒரு காலத்தில் திமுகவின் மூளை, கருணாநிதியின் மனசாட்சி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட முரசொலி மாறன் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
செருப்பரசியலும் வெறுப்பரசியலும்! பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்.. முரசொலி தாக்கு
முரசொலி மாறன்
முரசொலி மாறன் என்றாலே அவர் கோபக்காரர் எப்போதும் முகத்தை கடுகடுவென வைத்திருப்பார் என்பது தான், அவரை பற்றிய பிம்பமாக உள்ளது. அரசியல்வாதிகளில் இவர் ஒரு அபூர்வமானவரும் கூட. சிபாரிசு கேட்டு வருபவர்கள் தன் முன்னால் தலையை சொரிந்து கொண்டு நிற்பது, வழவழவென பேசி இழுப்பது, புகழ்மாலை பாடுவது இவருக்கு துளியும் பிடிக்காது.
பசப்பு வார்த்தை
எதுவாகினும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருக்க வேண்டும் என விரும்புபவர். அதேபோல் உதவிக்கேட்டு செல்பவர்களின் கோரிக்கையை செவிமடுத்துக் கேட்டு ஆகும், ஆகாது என அந்த நிமிடத்திலேயே சொல்லக்கூடியவர். தன்னால் முடியும் என்றால் முடியும் எனக் கூறி செய்துகொடுப்பார். முடியாது எனக் கருதினால் இதை செய்ய முடியாது எனக் கூறி அதற்கான காரணத்தையும் விளக்கி வந்தவர்களை வழியனுப்பி வைப்பார்.
மாருதி 1000
அதைவிடுத்து செய்ய முடியாத காரியம் எனத் தெரிந்தும் செஞ்சிடலாம், பார்த்துக்கலாம் எனப் பசப்பு வார்த்தைகளை பேசத்தெரியாதவர். எந்த ஒரு பணியையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என நினைத்தவர் முரசொலி மாறன். மத்திய அமைச்சர், கருணாநிதியின் அக்கா மகன், திமுகவின் முன்னணி தலைவர் என பல பெருமைகள் இருந்தும் தாம் மரணமடைவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை மாருதி 1000 காரை தான் முரசொலி மாறன் பயன்படுத்தினார். டாடா சுமோ, டாடா சியரா என அப்போதிருந்த அரசியல்வாதிகள் பயணித்த நிலையில் மத்திய அமைச்சராக இருந்தும் மாருதி 1000 காரையே அவர் வைத்திருந்தார்.
புதுப் புது வார்த்தைகள்
புதிய கார்கள் வாங்க பணமில்லாமல் இல்லை; ஆனால் தனது எளிமை பலருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என எண்ணினார்.
நாடாளுமன்றத்தில் கோடை மழை இடியை போன்று முழங்கக்கூடிய மாறன், இதற்காக முதல் நாள் மாலையில் இருந்தே பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாடம் படிப்பதை போன்று தனது உரைகளை தொகுக்கும் பணியில் ஈடுபடுவார். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புதுபுது வார்த்தைகளை தனது உரையில் இடம்பெற வைக்க வேண்டும் என தேடி தேடி தயார் செய்துகொள்வார். அவையில் பேச எழுந்தால் வில்லில் இருந்து பாயும் அம்பை போல் பதில்களை விளாசக்கூடியவர்.
கூட்டம் வேண்டாம்
ரயில்நிலையம், விமான நிலையம் என எங்கும் தன்னை வரவேற்க, வழியனுப்ப யாரும் வரவேண்டாம் என கட்சிக்காரர்களிடம் கண்டிப்பு காட்டியவர் முரசொலி மாறன். அதேபோல் திமுக எம்.பி.க்களிடமும் கூட்டத்தை கூட்டிக்கொண்டு சுற்றாதீர்கள் என உரிமையோடு அறிவுறுத்தச் செய்வார். கட்சிப்பொறுப்பில் இருப்பவர்களிடம் அவர் ஒரு பணியை கொடுத்து அதை நிறைவேற்றிவிட்டால் தப்பித்தார்கள். அப்படியின்றி அஜாக்கிரதையாக இருந்து சொதப்பினால் பெரும் பூகம்பத்தையே முரசொலி மாறன் வடிவில் அவர்கள் காணக்கூடும். அந்தளவுக்கு பொறுப்பில் உள்ளவர் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.
ராஜதந்திரி
மத்திய அமைச்சராக இருந்த இவர் மிகச்சிறந்த நிர்வாகத் திறமை உடையவர். தனது துறை சார்ந்த ஏ டூ இசட் விரல் நுனியில் வைத்திருப்பார். தன்னுடன் இருக்கும் அதிகாரிகளும் அதேபோல் இருக்க வேண்டும் என நினைத்தவர். முரசொலி மாறனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வேறு துறைகளுக்கு பணிமாறுதல் பெற்றுச்சென்ற அதிகாரிகள் ஏராளம். அந்தளவுக்கு கோப்புகளை தேங்கவிடாமல் அதன் மீது உடனடி நடவடிக்கைகளை எடுப்பார்.
பாஜக தேர்தல் அறிக்கை
திமுகவும் பாஜகவும் இன்று எதிரும் புதிருமாக இருந்தாலும் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவில் இடம்பெற்றவர் முரசொலி மாறன். கூட்டணிக் கட்சி பிரமுகர் என்பதை கடந்து முரசொலி மாறன் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார் வாஜ்பாய். மாறனின் ஒளிவுமறைவற்ற பேச்சும், நிர்வாகத் திறனும் வாஜ்பாயை பெரியளவில் ஈர்த்தன. முரண்டுபிடிக்கிறார் மாறன் என பலரும் அவரை பற்றி புகார் கூறியும் நாட்டிற்கு எது நல்லதோ அதை அவர் செய்வார் என பாராட்டுச் சான்றிதழ் அளித்தார் வாஜ்பாய். இப்படி பல குணாதிசயங்களை கொண்ட முரசொலி மாறனுக்கு இன்று அவருக்கு 89-வது பிறந்தநாள் ஆகும்.