அரசியல் களம் காண்போம்.. வாருங்கள் நேர்மையாளரே.. வேட்டி சட்டையில் கலக்கும் சகாயம் பேனர்!
சென்னை: அரசியல் களம் காண்போம், வாருங்கள் நேர்மையாளரே என சகாயம் பொதுக் கூட்டத்தில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சகாயம் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த போது எத்தனை நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளையை தடுத்தார். தான் பணியாற்றிய இடங்களில் நேர்மையை எல்லா நிலையிலும் கடைப்பிடித்தார்.
57 வயதான சகாயம் 7 ஆண்டுகளாக மக்களுடன் தொடர்பில்லாத ஒரு துறைக்கு தலைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்தார். இதை அரசும் ஏற்றது.

மக்கள் பாதை அமைப்பு
இதையடுத்து சகாயம் மக்கள் பாதை அமைப்பு என்ற இயக்கத்தை நடத்தி வந்தார். இதன் மூலம் மக்கள் சேவை செய்து வந்தார். இந்த நிலையில் சகாயம் போன்ற நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த மாதிரியான மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இளைஞர்கள் பட்டாளம்
இந்த நிலையில் சகாயத்தின் பொதுக் கூட்டம் ஆதம்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளார்கள். சகாயத்தை ஆதரித்து இளைஞர்கள் பட்டாளம், நடுநிலையாளர்கள், நேர்மையான ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பொதுக் கூட்ட மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

வாருங்கள் நேர்மையாளரே
அங்கு அரசியல் களம் காண்போம், வாருங்கள் நேர்மையாளரே என வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சகாயம் வேட்டி சட்டையில் இருக்கும் முழு உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் வந்துள்ளனர். வெளியூரில் இருந்து வருவோருக்கும் ஏழை எளியவர்களுக்கும் மதியம் 1.30 மணி முதல் உணவு வழங்கப்பட்டது.

நேர்மையான அதிகாரி
சகாயத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2 நிமிடங்கள் பேசி வருகிறார்கள். அவர்கள் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி அரசியலுக்கு வர வேண்டும் என பேசி வருகிறார்கள். முதல்வர் வேட்பாளராக வாருங்கள் ஐயா என அழைத்து பதாகைகளை வைத்துள்ளார்கள். சகாயத்தை அரசியலுக்கு அழைக்க கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் குவிந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications