சூர்யாவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு.. ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நீதிபதி
சென்னை: நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகர் சூர்யா நேற்று இரவு வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் " நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை.

பேரிடர் காலக்கட்டத்தில்
கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலக்கட்டத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸிங்கில் நீதி
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என்று கூறியிருந்தார்,

எழுத்துப்பிழை
'தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை' என்றே செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரணவாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்.

நீதிபதி கடிதம்
சூர்யாவின் அறிக்கையில் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதிமன்றம் நீதி வழக்குவதாகவும், ஆனால் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுவதாகவும் கூறியிருந்ததை குறிப்பிட்டு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என்று நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சூர்யாவின் நீட் அறிக்கை
இதனால் சூர்யாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு மரணம் குறித்த சூர்யாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications