அவருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாருமில்லை - விசிக விழாவில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மராட்டியத்தை விட அம்பேத்கரின் புகழை அதிகமாகத் தமிழ்நாட்டில் பரப்பியது திராவிட இயக்கம்தான் எனவும், அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாருமில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருதும், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடமையை செய்தேன்
நிகழ்ச்சியில் 'அம்பேத்கர் சுடர்' விருது பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கி பேசும்போது, என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார், அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான் இதற்குமேல் எவ்விளக்கவும் கொடுக்கவேண்டியதில்லை எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு இவ்விருதினை தருகிறேன் என்று அவர் சொன்னபோது தனக்கு அச்சமிருந்தது எனவும், அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு தான் சாதனை செய்யவில்லை தனது கடமையைத்தான் செய்தேன் என கூறினார்.

தமிழகத்தில் திராவிட இயக்கம்
மாநில ஆதிதிராவிடர் ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றைச் செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது என்பதே உண்மை எனவும், கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைகொள்பவன் எனவும், அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயரிட்டவர் கலைஞர் அவர்கள் தான் மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை அதிகமாகத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான் என பேசினார்.

அம்பேத்கருக்கு நிகரான தலைவர்
அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாருமில்லை, அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதைவிட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது? எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், முதன்முதலில் முதலமைச்சராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார் எனவும், பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார் எனவும், அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இவ்வாட்சி நடைபெறுகிறது எனவும் கூறினார்.

வன்கொடுமை நடக்கக்கூடாது
வன்கொடுமை நடக்ககூடாது என்பது தான் தங்கள் கொள்கை எனப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக பாகுபாடுகள் இம்மண்ணில் பேதம் கூடாது இது தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை எனவும், சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை எனக்கூறினார். அதே நேரத்தில் மனமாற்றம் தேவை என்று விட்டுவிடக்கூடாது சட்டங்கள் அதற்கு தேவை, . சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண் தான் எனவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் இல்லையென்றால் அவற்றை புறம்தள்ளவேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசியதையும் குறிப்பிட்டார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான் அவர்களின் வாழ்க்கையைப்போல் என் வாழ்க்கைய வடிவமைத்துக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன் எனவும் முதல்வர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications