'நீட்' தேர்வை ரத்து செய்யணும்.. எந்த நுழைவு தேர்வும் கூடாது.. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு ரத்து
மாணவர்களின் உடல் நலன், மன நலம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. பெற்றோர்கள், மருத்துவர்கள், 13 கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

குழு அமைப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு விளக்கமாக கூறியுள்ளது.

பிரதமருக்கு கடிதம்
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ' கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

நீட் தேர்வை ரத்து செய்யணும்
எனவே நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். உயர்கல்விக்காக தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். தற்போதுள்ள நிலையில் எந்த தேர்வுகள் நடத்தினாலும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட உயர்கல்விக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும் ' என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications