உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்டதற்கு நன்றி.. ஜெய்ஷங்கரை போனில் அழைத்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்களை மீட்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். குறிப்பாக மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது தவித்து உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக சென்ற தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்திய அரசும் ஆப்பரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இருப்பினும் கர்நாடகா மற்றும் பஞ்சாபை சேர்ந்த 2 மாணவர்கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, உக்ரைனில் சிக்கி இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். 5,000-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனில் சிக்கி இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
4 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா பாதிப்பு.. இந்தியாவுக்கு விடை கொடுக்கிறதா கொரோனா? மத்திய அரசின் அறிக்கை
இந்த நிலையில், ஏராளமான தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை தொலைப்பேசியில் அழைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்களை மீட்டதற்காக நன்றி தெரிவித்தார்.