மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம்..முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என 4 அரங்கங்களில் இந்த இலக்கிய திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை இலக்கிய திருவிழா இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதில் இரு நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட தமிழர் பண்பாட்டு நாணயங்கள், அச்சு பயன்பாடு எந்த அளவில் இருந்தது என்பதை விளக்கும் வகையில் படைப்புகள் ஏராளமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டபோது அதிகாரிகள் முழுமையாக விளக்கி கூறினார்கள்.
தொடர்ந்து சென்னை இலக்கிய திருவிழாவில் 108 நூல்களை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில் தமிழ் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன.
திமுக ஆட்சி என்பது தமிழாட்சி. கடந்த ஓராண்டுகளில் ஏராளமான தமிழ் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. தமிழுக்காகவே நாம் இங்கே கூடி இருக்கிறோம். பொங்கல் தினத்துக்கு மறுநாள் திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக. மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம்.

வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத சின்னமாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில் தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் தான்.
மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது திமுக அரசு. இன்று பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கிய உணர்வை ஓட்டியாக வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, மேயர் பிரியா, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் இலக்கிய படைப்பாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications