‛‛திருமாவளவன்’’ என கேள்வி கேட்ட நிருபர்.. ‛‛சம்பந்தமே இல்லை’’ என தவிர்த்த கேஎஸ் அழகிரி.. என்னாச்சி?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பற்றி கேள்வி கேட்டதற்கு, ‛சம்பந்தமே இல்லை' எனக்கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்கியது.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுலிடம் வழங்கி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி வைத்தார். இன்று ராகுல் காந்தி 2வது நாள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்டாலின்-திருமாவளவன்
முன்னதாக நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை, ராகுல்காந்தியின் கையில் கொடுத்து நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் பங்கேற்று இருந்தார்.

பதிலளிக்க மறுத்த கேஎஸ் அழகிரி
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி கன்னியாகுமரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கடந்த காலத்தில் திருமாவளவன் முழுவதுமாக காங்கிரஸை எதிர்த்தார். ஆனால் இப்போது உங்களுக்கு சப்போர்ட்டாக நடைப்பயணத்துக்கு வருகிறார். இதில் உங்களுக்கான பயன் எப்படி உள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பினார். இதற்கு கேஎஸ் அழகிரி, ‛‛இந்த செய்தியாளர் சந்திப்புக்கும், ராகுல்காந்தியின் நடைப்பயணத்துக்கும் இந்த கேள்வி சம்பந்தம் இல்லை'' என பதிலளித்தார்.

நழுவிய கேஎஸ் அழகிரி
இருப்பினும் பத்திரிகையாளர்கள் விடுவதாக இல்லை. அடுத்த கேள்விக்கு பிறகு மீண்டும் ஒரு பத்திரிகையாளர், ‛‛திருமாவளவன் உங்கள் கொள்கையை ஏற்று கொண்டு உள்ளாரா'' என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‛‛ஏங்க சம்பந்தமில்லாமல்.. அதற்கு வேண்டுமென்றால் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கலாமா?'' என சிரித்தபடி கூறி நழுவினார்.

கேள்வியை தவிர்த்தது ஏன்?
இதற்கு முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பியாக உள்ள திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சரமாரியாக தாக்கி பேசி இருந்தார். இதனை வைத்து தான் கேஎஸ் அழகிரியிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டு இருந்தார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடைப்பயணம் பற்றி கேஎஸ் அழகிரி
முன்னதாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேஎஸ் அழகிரி, ‛‛காந்தியின் கொள்கைக்கு நேர்எதிராக ஆர்எஸ்எஸ் கொள்கை உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை என்பது 4 முதல் 5 பகுதிகளாக மக்களை பிரித்து வைத்துள்ளது. இந்த பிரிவினை வேண்டாம். பிரதமர் மோடி மூலம் ஆர்எஸ்எஸ் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே வழிபாடு என சொல்கிறார். இது இந்தியாவுக்கு பொருந்தாது. இந்தியாவில் ஏராளமான மொழி, இறை வழிபாடு உள்ளது. எனவே இதுபோன்று ஏராளமான வித்தியாசங்களை ஒன்று சேர்ப்பது தான் காங்கிரஸின் கொள்கை. இதை மீண்டும் நிலைநாட்டுவதற்காக மக்கள் மனதில் வேகமாக வேரூன்ற செய்வததற்காக தான் ராகுல்காந்தி நடைப்பயணம் ஆரம்பித்துள்ளார்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications