தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்து 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாதவர்களின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்காக 2,10,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11,000 இடங்கள் உள்ள நிலையில், 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 5,000 பேர் அதிகமாகும்.

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும். கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் 110 மையங்களில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்தலாம். 7 நாட்களில் கட்டணத்தை செலுத்தாவிடில், அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்படும். அந்த இடங்கள் கலந்தாய்வில் பங்கேற்று இடத்தை தேர்வு செய்துவிட்டு நல்ல கல்லூரிக்காக காத்திருப்போருக்கு வழங்கப்படும். இப்புதிய நடைமுறையால் சிறந்த கல்லூரிகளில் இடம் காலியாக இருப்பது தவிர்க்கப்படும்.
அதேநேரத்தில் சில பாதக அம்சங்களும் உள்ளன. புதிய நடைமுறை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குறைந்த காலமே உள்ளது. மேலும், கட்டணத்தை செலுத்துவதற்காக மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கும் குறைந்த அவகாசமே இருக்கும். மாணவர்களின் கட்டண புகார் தொடர்பாக எவ்வித குறைதீர்ப்பு முறையும் இல்லை.
ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. அதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் கலந்தாய்வு அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications